*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 23, 2011

வாழ்வியல் கதைகள் (23/4/2011)

[1]
.கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது ஒருவன் புத்தரிடம் சென்று “ மனிதன் அனைவரும் மோட்சத்தை அடைய முடியும் என்கிறீர்கள்,ஆனால் எவரும் மோட்சத்தை அடைவதில்லை,அடைவதாகத் தெரியவில்லையே ”என்று கேட்டான்.
புத்தர், நண்பரே ! ஒரு வேலை செய் ! கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள்? என்பதைக் கேட்டு  பெயர் வாரியாக அவர்களின்  பதிலை பட்டியலிட்டு வா என்று அனுப்பிவைத்தார்.அவனும் கிராமத்தில் அனைவரிடமும் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைக்  கேட்டு பெயர் வாரியாக விருப்பங்களை எழுதினான்.இந்த பட்டியலை புத்தரிடம் சமர்ப்பித்தான்.
இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் பட்டியலைப் பார்த்து சொல் என்றார் புத்தர்.அவன் பதில் இல்லாமல் தவித்தான்.ஏனெனில் ஒருவரும் மோட்சத்தை அடைய விரும்புவதாகக் கூறவில்லை.
புரிந்துகொள் நண்பனே ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறினனே தவிர ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என சொல்லவில்லை.விரும்புகிறவன் மட்டுமே விரும்பியதை அடைய முடியும் என்றார் புத்தர்.  
[2.]
ஒரு பெளர்ணமி இரவு.நதியோரம் சிலுசிலுவென காற்று ரம்மியமாக இருந்தது.நான்கு நண்பர்கள் இதை ரசித்த வண்ணம் மது அருந்தினார்கள்.நதியில் படகில் செல்ல முற்பட்டனர்.நல்ல போதையில் பெளர்ணமி இரவை ரசித்தபடி துடுப்பை நீருக்குள் வலித்து,வலித்து படகுப் பயணம் மேற்கொண்டனர்.
பொழுது விடிந்தது,சூரிய ஒளி ஒளிர போதையும் தூக்கமும் தெளிந்தது.இரவு முழுதும் பயணம் செய்தோமே எங்கு வந்துள்ளோம்,வழி என்ன ,எப்படி வீடு போய் சேருவது என ஒருவருக்கொருவர் கலந்துரையாடிய போது, ஒருவன் சொன்னான்  டேய் நாம் நம்ம ஊரில்தான் இருக்கிறோம்,இதோ பார் இது நம்ம ஊரு ஆற்றங்கரைதான் என்றான்.
பிறகுதான் கவனித்தனர் இரவு படகுப் பயணம் துவங்கும் முன் நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்துவிடாமலே  போதையில் துடுப்பை மாங்கு மாங்குனு வலித்து இருந்துருக்கின்றனர்.
தனது படகைக் கரையினின்று அவிழ்த்து விடாதவர்கள் முடிவற்ற பரம்பொருளின் சாகரத்தில் எத்தனை தவித்தாலும்,கூக்குரலிட்டாலும் அவர்களுக்கு கதி எதுவும் கிடையாது.

Apr 21, 2011

திருநங்கைகளின் அட்டகாசம்

திருநங்கைகள் என்ற பிரிவினர் நம்முடன் வாழ்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தற்பொழுது இவர்களுக்கான சித்திரைத் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் பகுதியில் நடைபெற்று வருகிறது.





விழா நடைபெறட்டும்,கொண்டாடட்டும்.வாழ்த்துக்கள்.

இவர்களில் சிலர் கல்வித் தகுதி பெற்று சுய சம்பாத்யமுடன் இருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் சமுதாயப் பார்வையில் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவர்கள் ஆசிர்வதித்தாலும்,சாபமிட்டாலும் பலிக்கும் என்பது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.
திருநங்கைகளின் புழக்கம் வட மாநிலங்களில் அதிகம்.இவர்களில் பெரும்பாலானோர் தனது பிறப்பினையே காரணமாக வைத்து பல வேதனைக்குரிய செய்கையில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று பிச்சையெடுப்பது.

தமிழ்நாடு எக்ஸ்பிரசில் திருநங்கைகளின் அட்டகாசத்தையும் பயணிகள் சிலரது வம்புனித்தனத்தையும் பகிர்ந்தாக வேண்டும்.

சென்னையிலிருந்து தில்லிக்கும்,தில்லியிலிருந்து சென்னைக்கும் தமிழ்நாடு எக்ச்பிரசில் ஸ்லீப்பர் க்ளாசில் பயணிக்கும் போது
திருநங்கைகள் வருவது வழக்கம்.எந்த ஸ்டேசனில் ஏறுகிறார்கள்,இறங்குகிறார்கள் என்பது தெரியாது.பல ரயில்களிலும் இதே நிலைதான்.

ஏசி வகுப்பினுள் பயணிகளும்,ரயில் பணியாளர்களும்  தவிர வேறு யாரும் நுழைய முடியாது.ஸ்லீப்பர் கிளாசில் பல வியாபரங்கள்,பல வகை பிச்சைக்காரர்கள்  வருவார்கள்.திருநங்கைகளும் வருவதுதான் கிலுகிலுப்பு,ரயிலில் அமர்ந்திருப்பவர்களிடம் அவர்களது தொனியில் பேசி,நாணி,கோணி கைத்தட்டி காசு கேட்பார்கள்.கேட்டவுடன் கொடுத்துவிட்டால் தொல்லை பன்னாமல் நகர்ந்து அடுத்தவரிடம் சென்று விடுவார்கள்.5 ரூபாய்க்கு குறைவாய் வாங்க மாட்டார்கள்.பணத்தைப் பெற்றவுடன் சிலர், பணம் தந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து நகர்வார்கள்.




 பார்ப்பதற்கு முரடுத்தனமாய், ரிச் லுக்காய்,சொங்கா மங்கியாய் இருப்பவர்களை ஒதுக்கிவிடுவார்கள்.புதிதாய் திருமணமானவர்கள்,குழந்தை வைத்திருப்பவர்கள்,முக்கியமாக இளைஞர்கள், ஏளனப் பேச்சு ,  ஏளனப் பார்வை பார்க்கிறவர்களை விட மாட்டார்கள்.பணம் கொடுத்தேயாக வேண்டும்.இல்லையெனில் சிலர் சபித்துவிட்டும் போவார்கள்.

இளைஞர்கள் பணம் தர மறுத்தால்,அவர்களை தாகதபடி தொடுவது,முத்தமிடுவது போன்ற சில்மிசங்கள் தாங்க முடியாமல் சில இளைஞர்கள் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

 நமது அக்மார்க் இந்திய  இளைஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
 திருநங்கைகளிடம் சில்மிசங்கள் செய்வார்கள்.ஆட்டம் பாட்டமும் நடக்கும்.பக்கதில் மனைவி மக்களுடன் அமர்ந்திருப்பவர்ளும்,மற்றவர்களும் கண்டும் காணாதது போலவும்,முகம் சுளித்த வண்ணமும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

ஒருமுறை அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர்,  இவ்வாறு வந்த திருநங்கையை கேலி செய்தவுடன் ஒரிஜினலா என்னானு பாரேன்னு தனது சேலையை தூக்கி காமித்தவுடன் அவர்களுக்குள் கெக்கறிப்பு அதிகமாக,பகத்தில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கண்டித்தார்.உனக்குமா சந்தேகம்னு,........,..........,அசிங்கசிங்கமாக திருநங்கை பேச ஆரமித்துவிட்டார்.அந்த பெரியவர் பதில் தர முடியாமல் முகம் சுண்டிப்போய்விட்டார்.தட்டிக் கேட்டால் வீண் வம்பு என அனைவரும்  பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த சம்பவத்தை பதிவில் பகிர்ந்தது தவறென்றால் மன்னிக்கவும்.

தில்லியில் பல சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பதில் திருநங்கைகளையும் அதிகம் காணலாம்.மற்ற பிச்சைக்காரர்களைவிட அதிகாரமாகவும்,கட்டாயப்படுத்தியும் பிச்சையெடுத்து செல்லுகின்றனர்.


ஜனவரி மாதம் நான் கிளிக்கியது.குளிரிலும் சிக்னலில் தொல்லை பன்னும் திருநங்கைகள்.இடம் பீராகடி 
.






மூன்றாம் பாலினத்தவராக பிறந்தவர்கள் சமுதாயத்தில் சக மனிதர்களாய் வாழ  போராட வேண்டியதாக உள்ளது.அதற்காக இப்படி மற்றவர்களை முகம் சுழிக்க வைத்து தங்கள் பிறப்பை கேவலப்படுத்த வேண்டாம். மற்ற மனிதர்களும் இவர்களை இழிவுபடுத்தாமல் இருத்தல் வேண்டும்.



Apr 19, 2011

திருமலை நாயக்கர் மஹால் - மதுரை




திருமலை நாயக்கர் சிலை
 திருமலை நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது.இது திருமலை நாயக்கரின் அரண்மனை.ஏனோ தெரியவில்லை திருமலை நாயக்கர் மஹால் என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது.இந்த அரண்மனை பற்றி ஏற்கனவே யாராவது பதிவு எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.மதுரையில் தற்போது நடைபெறும் சித்திரைத் திருவிழா பற்றி ரெண்டு பதிவுகளில் படித்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஊரான மதுரை பற்றி என் பதிவிலும் எதாவது எழுத ஆசைப்பட்டேன்.உடன் நினைவுக்கு வந்தது திருமலை நாயக்கர் மஹால்தான்.


என் சிறு வயதில் என் அப்பா,தாத்தாவுடன் சென்றிருக்கிறேன்.சிறு வயதில் நான் அங்கு சென்றிருந்தபோது மிகப் பிரம்மாண்டமான கட்டிடமுமாக அகன்ற,உயரமான தூண்களை வியப்பாக பார்த்து நின்றது ஞாபகம் இருக்கிறது.தூண்கள் உருளை வடிவத்தில் இருந்தாலும் ஒரு தூணைச் சுற்ற முதல் அடி எடுத்து வைத்த இடத்திற்கு மீண்டும் வந்து சேருவதற்குள் நீண்ட நேரம் ஆனது இன்னும் நினைவிருக்கிறது. இது அரசனின் நாற்காலி என்று ஒரு நாற்காலியைப் பார்த்தது நினைவிருக்கிறது.முழு அரண்மனையையும் பார்த்து முடித்த பின் இன்னும் சற்று நேரம் அங்கும் இங்கும் ஓடியாடி,சுற்றி விளையாட ஆசைப்பட்ட என்னை வலுக்கட்டாயமாக வா போகலாம்னு என் தாத்தா பர பரனு அழைச்சிட்டு வெளியேறியதாக ஞாபகம்.அதற்கு பிறகு அங்கு போக இன்னும் வாய்ப்பு அமையவில்லை.





இந்த அரண்மனை தென்னிந்தியாவின் பண்டைய அரண்மனைகளில் ஒன்று.கிபி1627 ஆம் ஆண்டு முதல் கிபி1659ஆம் ஆண்டு வரை திருமலை நாயக்கர் ஆண்டு வந்திருக்கிறார்.1639 ஆம் ஆண்டில் இந்தோ-சாரசீனிக் முறைப்படி இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது.திருமலை நாயக்கர் தமது 75 ஆம் வயது வரை இந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கிறார்.


திருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையில் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்க விலாஸம், ரங்க விலாஸம், என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக் கருவிகள் இசைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள் சுற்று மதிள் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாஸத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாஸத்திலும் வசித்தனர்.


இப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாஸம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் இக்கட்டத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்கில் புறங்களில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன. தற்பொழுது வடபுறச் சிகரத்தில் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு பகுதி உள்ளது.தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல் ஆகும்.


இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே வழி இருப்பதாகக் குறிப்புகள் இருக்கிறதாம். .

இங்கு கல்பீடத்தின் மீது நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடுள்ள மண்டபம் உள்ளது.அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியனை உள்ளது.



செங்கோல் விழா


ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.

அந்தப்புரம்


சொர்க்க விலாஸத்தின் மேற்கில் அந்தப்புரம். தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் இசையும் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றிவரும்போது கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.
அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் 'வசந்தவாவி' என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம் ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலியன இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார் உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன.
சொர்க்க விலாஸத்தின் வடமேற்கில் கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் இருபுறமும் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.

.
தேவி பூசைக்கோவில்
நாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும் உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங்கு இராஜராஜேஸ்வரியயும் மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவர். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்துள்ளது.

ரங்கவிலாஸம்


இக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே. இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாஸம் இருந்தது. சொர்க்க விலாஸம் போல இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னம் ஒரு கட்டடம் இருந்தது.இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு "காவல் ராஜாக்கள்" இருந்தனர். பல பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வாயில் பத்து தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இது இருந்த இடமே நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட இக்கட்டடம் இருந்தது. ஆனால் பழுதடைந்திருந்தது. 1858ல் பழுது பார்க்கப்பட்ட போதிலும் இது அதிகநாள் நிற்கவில்லை. கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுற்று மதில்

இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதில் இருந்தது. இதைப் பாரிமதில் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதில் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையிலிருந்ததால், 1837ல் இச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிலுக்கு வெளியில், மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவில் ஒரு கட்டடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.

அரண்மனைப் பகுதி மறைவு

இவ்வெழில் வாய்ந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பெயரன் சொக்கநாத நாயக்க மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அதன் தலைநகரை மாற்றியபோது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சி எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் கலை அதிக இடம் பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப்போக்கில் பல பகுதிகள் அழிந்துவிட்டன.

அரண்மனை பிழைத்தது

கிபி 1857லேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாஸத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கிபி. 1858ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 1868ல் சென்னை கவர்னராயிருந்த லார்டு நேபியர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு , ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக்கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுதுபார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்போல் தீட்டப்பட்டன. 1970 வரை நீதிமன்றங்கள் இவ்வரண்மனையில் இயங்கிவந்தன. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வரண்மனையைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.
தினந்தோறும் 08-00 மணிமுதல் 17-00 வரை சுற்றுலாவினருக்காக திறந்திருக்கும் இம்மண்டபத்தில் ஒளி/ஒலிக்காட்சி தினந்தோறும் இருமுறை நடத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் மாலை 6-45க்கும் தமிழில் இரவு 8-15க்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இக்காட்சிகளை நடத்துகிறது.  
அரண்மனைக்குள் ஒளிஒலிக்காட்சிக்காக காத்திருப்போர்
.




http://youtu.be/SdOR8rdSbRo இந்த லின்க்கிற்கு சென்று பார்க்கவும்



திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும். அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.

http://youtu.be/em3hJX8dLkk   இந்த லின்க்கிற்கு சென்று பார்க்கவும்


இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பம்பாய் திரைப்படத்தின் ’கண்ணாலனே என்னை நேற்றோடு காணவில்லை’ என்ற பாடல் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்ட பாடலாகும்.
விக்ரம் நடித்த பீமா திரைப்படத்தின் ’இது ரகசிய கனவு சொல்’ என்ற பாடலும் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்ட பாடலாகும்.



Apr 17, 2011

முதியோர் இல்லங்கள் அதிகமாவது கேவலமில்லையா?

நேற்றைய இளமையின்
 தியாகம் இன்றைய
        முதுமை
இன்றைய வாலிபம்,
நாளைய முதுமை.



இலங்கயில் முதியோர் இல்லத்தின் மீது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த முதியவர்கள் 
 அன்னையர் தினம்,தந்தையர் தினம்,தோழமை தினம்,காதலர் தினம் போல உலகில் முதியோர் தினம் கொண்டாடப்படுவதும்,இப்படி ஒரு தினம் அரசால் அங்கிகரிக்கப்பட்டு வருடம் தோறும் அக்டோபர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறதென்றும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இந்த முதியோர் தினமும் முதியோர் இல்லங்களில் மட்டும்தான் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு வருத்தமாகதான் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு காதலர் தினம் எப்போதென்றும்,என்ன செய்ய வேண்டுமென்றும்  சரியாகத் தெரிந்திருக்கலாம்.

ஐ.நா சபை 1991 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 ஆம் நாள் முதியோர் தின நாளாக அறிவித்துள்ளதாம்.அமெரிக்கா முதியோர் தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும்,ஜப்பான் முதியோர் தினத்தை முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கின்றதாம்.

புராண காலங்களில் போரில் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்,மகப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கும் தனி மடங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது.பிறகு நவீனமாகி முதியோர் இல்லங்களாகிப் போய்விட்டது.இனி பாதுகாக்கவோ அரவணைக்கவோ யாருமில்லாத சூழ்நிலையில்,வைத்திருக்கும் சேமிப்பைக் கொண்டு இங்கு தானாக முன்வந்து முதியோர்கள் சேர்ந்துகொள்கின்றனர்.இந்த பக்குவம் சிலருக்கு மட்டுமே வருகிறது.



இந்தப் படத்தைப் பார்த்தவுடன் இதன் கதை என்னவென்று புரிந்திருக்கும்.ஆனால் இன்று எந்த பிள்ளையும் இப்படி செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை.நாம் குடிக்கிற கூழோ கஞ்சியோ பெத்தவங்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் பிள்ளைகளுடன் வாழும் நிம்மதியில் பெற்றவரின் முழு வயிறும் நிரம்பிவிடுமே.ஆனால் இன்று கூழ் ,கஞ்சி குடிக்கிறவனை விட,ஹைடெக்காகவும்,பணத்தில் புரளுபவர்களும்தான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுபவர்களாக இருக்கிறார்கள்( இது எல்லோருக்கும் பொருந்தாது).பிள்ளைகளுக்காகவே வாழ்க்கைய அற்பணித்து,ஆளாக்கி,அவன் வளர்ச்சியில் பெருமிதம் கொள்ளும் பெற்றவர்களை வேலை நிமித்தம்,கணவன் மனைவி வேலைக்கு செல்லுதல்,வெளிநாட்டு வாழ்க்கை இப்படி பல காரணஙளால் பெற்ற பிள்ளைகளே தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கொடுமைகள் அதிகரிக்கிறது. இன்னும் ஆதரவற்ற எத்தனையோ முதியவர்கள் கடைசிக் காலத்தை எப்படி கழிப்பதென்று தெரியாமல் பிச்சையெடுப்பதைக் கூட  பார்த்திருக்கலாம். 

மகனோ/மகளோ நம் கண்ணுக்கு கண்ணாக வளர்த்துவிட்டு படிப்பிற்காகவோ அல்லது குடும்ப சூழல் காரணமாகவோ விடுதியில் சேர்க்க நேரிடும்போது பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் ஏற்படும் தவிப்பை வார்த்தையில் சொல்ல முடியாது.பிள்ளையின் எதிர்காலத்திற்காக அந்த சூழலையும் பழகியாக வேண்டிய கட்டாயம்.ஆனால் வாழ்க்கை அனுபவங்கள் பற்பல பெற்று  வாழ்ந்து முடித்தாகிவிட்டது,இனி நமக்கு தேவை ஓய்வும்,ஆதரவும்தான் என்கிறபோது முதியோர் இல்லம்தான் அதற்கான இடம்  என்ற நிலை பெற்றோர்களுக்கு கிடைக்கும் அவலம்   என்பதைவிட,அவர்களின் பிள்ளைகளுக்குத்தான் கேவலம்.பெற்றோர்கள் இல்லையெனில் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா என்பதை சிலர் நினைவுபடுத்திக் கொள்வதில்லை.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்  முதியோர் இல்லத்தில் மேஜிக் ஷோ நடைபெற்றதை ஒளிபரப்பினார்கள். கண் முன்னே மாய ஜாலம் நடந்தால் எல்லோருக்கும் ஆச்சர்யமும்,திகைப்பும்,மகிழ்சியும் ஏற்படும்.இதே உணர்வுகள் அங்குள்ள முதியோர்களின் முகத்திலும் ஏற்படுவதைப் பார்க்கும் போது எனக்கு அந்த மேஜிக்கை ரசிக்க முடியவில்லை,குழந்தைகள் போல அவர்கள் குதுகளித்தாலும் அவர்களின் கண்களிலும்,முகத்திலும் ஒரு சோகம்,எதோ ஒரு எதிர்பார்ப்பு இருப்பது நன்றாகவே தெரிந்தது.அந்த இல்லத்தின் நிறுவணர் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,வந்து சேரும் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சொன்னது எனக்கு வேதனையளித்தது.

அனைத்து பிள்ளைகளையும் குறை சொல்ல முடியாது,அதுபோல சிலரை கவனித்ததில்

திருமணத்திற்கு பிறகு மனைவியின் அம்மாவையும்   பாதுகாக்கும் மருமகன் கிடைத்த மாமியார் ஒருவர் தன் பெண் ,தன்னை அதிகம் கவனிக்கனும்னு செய்யும் சின்ன சின்ன டார்ச்சலைப் பாக்கும்போது அந்த அம்மா இல்லைனா கணவன் மனைவி இன்னும் நல்லபடியா/நிம்மதியா இருப்பாங்கனு தோணும் . 

சில பெண்கள் மாமியார்,மாமனாரை கவனிக்கும்போது நம்ம அப்பா அம்மா அங்க என்ன செய்கிறார்களோனு நினைத்துக் கொண்டே பணிவிடைகள் செய்வதும் உண்டு.இந்த நிலையில் ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

சில பெண்கள் மாமியார்,மாமனாரை நிறைவாக கவனித்துக் கொள்வது இல்லைதான்.

சில மாமியார்,மாமனார்க்கு தன் மருமகள்/மருமகன் என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்து பனிப்போர் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

சிலருக்கு மட்டுமே இரு தரப்பும் நிறைவான உறவாக அமைகிறது.


சிறு பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தால் கூட சமாதனப்படுத்தி விடலாம்.பெரியவர்கள் சில சந்தர்ப்பங்களில் பிடிவாதமாக இருக்கும் நிலையில்ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வதில் குறைந்துவிட மாட்டோமென்ற எண்ணம் பெரியவர்களுக்கும் வர வேண்டும்.பெரியவர்களுக்கான கவனமும்,அக்கறையும் நம் மனதில் இருப்பதை அவர்களுக்கு புரியும்படி நடந்துகொள்ள  வேண்டும்.

என்ன கஷ்டமிருந்தாலும் பெற்றோரை,மாமனார் மாமியாரை நம்மை வளர்த்து ஆளாக்கியவர்களை நாம் கவனிக்கவில்லை என்றால் வேறு யார் கவனிப்பார்கள்.அவர்களின் இளமையில் நம்மை கவனிக்காமல் விட்டுருந்தால் நம் இன்றைய நிலமை என்னவாகிருக்கும்?நினைத்துப் பார்க்க வேண்டும்.

நமது தாத்தா பாட்டி காலங்களில் நான்கு,ஐந்து பிள்ளைகள் அல்லது அதற்கு மேல் இருப்பா்ர்கள்.வயதான காலத்தில் ஒவ்வொரு பிள்ளை வீட்டில் காலத்தை கழித்திருக்கலாம்.இப்போது ஒரு குழந்தையை பெற்று வளர்த்து படிக்க வைத்து முன்னேற்றுவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறது.அந்த பிள்ளை பிழைக்கப் போகும் இடத்திற்கெல்லாம் பெற்றோரை அழைத்துச் செல்ல முடியுமா என்பதும்,பெற்றோர் சிலருக்கு தன் சொந்த இடத்தை விட்டு பிள்ளையுடன் போக விரும்பாததும் ஒரு காரணமாகிறது.

முதியோர் இல்லங்கள் அதிகரிக்க வேண்டாம்.கடைசிக் கால கடமைகள் செய்தால் கூட அவர்கள் நம்மை வளர்த்து ஆளாக்கிய அன்புக் கடனை தீர்க்க முடியாது என்பது என் கருத்து. 


முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்கள் தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் தனது கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழிக்கப் போவதாக ஒரு பத்திரிக்கயில் செய்தி படித்தேன்.

 இந்த பதிவு முதியோர்களை மதிப்பவர்களுக்கும்
பெற்றோரைப் பாதுகாப்போருக்கும்
அல்ல.

Apr 16, 2011

இதெல்லாம் மனுஷன் போட்டுக்கத்தானா?

























Apr 15, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 6


தாயும் மகளும் மறுநாள் காலை புறப்பட்டனர், அம்மாவின் நடவடிக்கையால்ஆர்த்திக்கு சந்தோஷ் மாமாவை பாக்கப் போகிறோமென்ற சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.ஆர்த்திக்கு மனதில் பல சந்தேகங்கள்,கேள்விகள் தோன்றினாலும் அம்மா நேத்திக்கடனை செலுத்திவிட்டு  நாளையே புறப்பட்டுவிடுவோம்னுதான் கூட்டிட்டுப் போறாங்க ,எனவே நாளைக்குள் சந்தோஷ் மாமாவிடம் எப்படியாவது மனமார பேசிடனும்,ஸ்வாதி சொன்னது போல சந்தோஷ் மாமா மனதில் நான் இருக்கிறேனா என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,நிச்சயமா சந்தோஷ் மாமாவும் தன்னை  விரும்பிக் கொண்டிதானிருப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணித்தாள் ஆர்த்தி.
பயணம் முடிந்து பேருந்தை விட்டு இறங்கி இருவரும் சந்தோஷ் வீடு நோக்கி நடந்தனர்.தேடினால் தேடியது கிடைக்கும் என்பது போல ஆர்த்தியின் கண்களுக்கு தன்னைச் சுற்றி இருப்பது எதுவும்  தெரியவில்லை, சந்தோஷ் தன் வீட்டு வாசலில் யாரோ ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்ததுதான் ஆர்த்தியின் கண்களுக்குத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்த்த ஆர்த்தி, நறுமணம் மிகுந்த தோட்டத்தில் சிறகு விரித்து பறந்து செல்ல இயலாத பட்டாம்பூச்சியாய் பூரித்த முகத்துடன் அம்மாவிற்கு தன்னிலை தெரிந்துவிடக் கூடாதென்று பவ்யமாய் நடந்து சென்றாள் ஆர்த்தி.சந்தோஷ் வீட்டின்  அருகே இருவரும் சென்றதும்,சற்றும் எதிர்பார்க்காத சந்தோஷ் ஆச்சரியத்துடன் வந்தவர்களை  வாய் நிறைய ” வாங்கத்த,வா ஆர்த்தி “ என்றதும் ஆர்த்திக்கு இதயத் துடிப்பு நின்றே போனது.

சந்தோஷின் அழைப்பிற்கு புன்னகையுடன் தலையசைத்த ஆர்த்தியின் அம்மா, சிலையாய் நிற்க முயலுகிற தன் மகளின் தோல்பட்டையை அசைத்து  போமா என்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள் ஆர்த்தியின் அம்மா.உள்ளே சென்றதும் வரவேற்த்த அத்தை,மாமா முன் தன்னை சாதரணமானவளாகக் கஷ்டப்ட்டுக் காட்டிக்கொண்டாள் ஆர்த்தி.அவள் கண்கள் சந்தோஷ் மாமாவை பார்த்தும் பார்க்காதது போல அவன் இருக்கும் இடத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும்,மனமெல்லாம் சந்தோஷ் மாமாவிடம் எப்படி,எங்கு,என்ன பேசுவது,வாய்ப்பு கிடைக்கனுமேனு படபடத்துக் கொண்டிருந்தது.மனதுக்குள் வேண்டாத சாமிகளையெல்லாம் வேண்டிக் கொண்டாள்,எந்த மாரியம்மனுக்கு நேத்திகடன் செலுத்துவதற்காக வந்திருக்கிறாளோ அந்த மாரியம்மனிடமும் சந்தோஷ் மாமாகிட்ட பேசி,எல்லாம் நல்லபடியா நடந்து சந்தோஷ் மாமாவின் மனைவியாகிட்டா தினமும் உன்னை தரிச்சு வழிபடுவேன்னு மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.  
கடுதாசி போட்டுருந்தீனா பஸ்ஸ்டாண்டுக்கு வந்து அழச்சுட்டு வந்திருப்பேனே,வந்ததில் சந்தோசம்,திடீர்னு வந்திருக்க,எதாவது முக்கியமான விசியமா நாங்க தெரிஞ்சுக்கலாமா ? என்று ஆர்த்தியின் அம்மாவிடம் விசாரித்தார்,சந்தோஷின் அப்பா.ஒண்ணுமில்லண்ண போனதட இங்க வந்திருந்த போது பக்கத்துல உள்ள மாரியம்மன் கோவிலில் ஆர்த்திக்கு இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைக்கனும்,கிடைச்சிட்டால் மனங்குளிர அபிஷேக ஆராதனை செய்கிறேனு வேண்டிக்கிட்டேண்ண,இன்ஜினியரிங் சீட் கிடைத்து  இப்ப ஆர்த்தியும் ரெண்டாவது  வருஷமும் படிக்கப்போறா,நாளைக்கு வெள்ளிக்கிழமையே அபிஷேகத்த செய்துட்டு நாளை மதியமே கிளம்பிடலாம்னு இருக்கோம்  என்றாள் ஆர்த்தியின் அம்மா.அப்படினா இன்னைக்கு சாய்ங்காலமே கோவிலுக்கு போய் அய்யர்கிட்ட சொன்னாதான் ஏற்பாடு செய்வார்,என்னென்ன வேணும்னு சொல்வார்,நாம சாய்ங்காலம் போய் சொல்லிட்டு வந்திடுவோம் என்றாள் சந்தோஷின் அம்மா.கடவுளே 24மணி நேரம் கூட நமக்கில்லயேனு 
தவித்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

கலந்துரையாடல்கள் ,உணவு முடிந்து.நான் எதிர் வீட்டு சாந்திய பாத்துட்டு வர்றேனு ஆர்த்தியின் அம்மா கிளம்பினாள்.சந்தோஷ் தன்னை  பொருட்டாக மதிப்பது போல  ஆர்த்தி உணரவில்லை என்றாலும் மீனுக்காக் காத்திருக்கும் கொக்கு போல சந்தோஷிடம் மனம்விட்டு பேச
காத்துக் கொண்டிருந்தாள்.சந்தோஷ் அலமாறியில் எதோ தேடிக் கொண்டிருந்தான்,தைரியத்தை வரவழைத்து அருகே சென்ற ஆர்த்திக்கு  சந்தோஷை மாமானு கூப்பிட்டு பேச்சை ஆரம்பிக்க ஆசை. சந்தோஷ் தன்னை பார்த்தவுடன்   ஆர்த்திக்கு  குரலே இல்லாமல் போய்விட்டது.உடனே   அங்கிருந்து போகிற சந்தோஷை நில்லுங்க மாமானு கூட  அவளால் சொல்ல இயலவில்லை.சந்தோஷை நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்தாலும் இந்த ரண வேதனைக்கு நம்ம ஊர்லையே இருந்திருக்கலாம் போலருக்கேனு நொந்துகொண்டிருந்தாள் ஆர்த்தி.சாந்தி அக்கா வீட்டுக்கு போன அம்மாவும் திரும்பி வந்துவிட்டாள்.பிறகு சந்தோஷ் எங்கிருக்கிறானு ஆர்த்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை.பெரியோர்களுக்குள் அந்த கதை,இந்த கதையெல்லாம்  நடைபெற்றது.பொழுது போகப்போகுது வாங்க அய்யர்ட்ட போய் விபரம் சொல்லிட்டு வந்திடலாம்னு கூப்பிட்ட சந்தோஷ் அம்மாவுடன் புறப்பட்டாள் ஆர்த்தியின் அம்மா.

இதைவிட்டால் வேற சந்தர்ப்பம் அமையாது,எப்படியாவது சந்தோஷ் மாமவிடம் பேசிட வேண்டும்னு சந்தோஷைத் தேடினாள் ஆர்த்தி. சந்தோஷின் அப்பா எதோ எழுதிக் கொண்டிருந்தார்,ஆர்த்தி அங்குமிங்கும் உலாவது கண்டு,என்னம்மா அம்மாவ பாக்குறியா,அவங்க வர பதினஞ்சு நிமிசமாவது ஆகும்,எதாவது புக்கு படிக்கிறியா,உள்ள அலமாறியில புக்ஸ்லாம் இருக்கு,இல்ல டீவீ பாறேன் என்றார்.பரவாயில்லனு ஆர்த்தி சொல்லி முடிப்பதற்குள்  யாரோ ஒருவர் வந்து சந்தோஷ் அப்பாவிடம் பேசத்தொடங்கினார்.சில விநாடியில் ஆர்த்தி வீட்லயே இரும்மா,நான் இவர் வீடு வர போய்ட்டு வந்துடுறேன்,கொஞ்சம் வேலயிருக்கு,சந்தோஷ் சாந்தி வீட்டுக்குதான் போயிருக்கான்,வந்துடுவான்,அம்மா,அத்தயும் இப்ப வந்திடுவாங்க,சரி நான் போயிட்டு வந்திடுறேம்மானு கிளம்பினார் சந்தோஷின் அப்பா.

சாந்தி அக்கா வீட்டுக்கு போய்டுவோமானு நினைத்தாள் ஆர்த்தி.அதற்குள் சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்து தோட்டப்பக்கம் சென்றான்,வழி தவறிய  
ஆட்டுக் குட்டி தன் தாயைப் பார்த்ததும் பின்னடியே செல்வது போல ஆர்த்தியும் சந்தோஷ் பின்னே சென்றாள்.ஆர்த்தி வந்து நிற்பது தெரிந்தும் நிமிர்ந்து பாக்காமல் கை கால்களை கழுவிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.முக்கி முனகி,கஷ்டப்பட்டு ஏன் என்னை அலட்சியப்படுத்றீங்கனு ஆரமித்தாள் ஆர்த்தி,நிமிர்ந்து பார்த்த சந்தோஷ் புன்னகைத்தது, பேருக்கு புன்னகைக்கப்பட்டதாகத் தெரிந்தது, நாளைக்கு நான் ஊருக்கு போய்டுவேன் மறுபடியும் உங்கள எப்ப பாப்பேனு தெரியலனு ஒரு பக்க முகத்தை சுவற்றில் சாய்த்து கண் கலங்கத் துவங்கினாள் ஆர்த்தி.

உம் மனசுல என்ன நினப்புல இருக்க ஆர்த்தி என்றான் சந்தோஷ்.மாமானு உரிமையா கூப்பிட்டு பேசவோ,நான் உங்கள விரும்புறேன் மாமானு சொல்லவோ ஆர்த்திக்கு வாய் வரவில்லை.அழுகை கலந்த அமைதி காத்தவள் என்னை ஏமாத்திடாதிங்க,பதில் சொல்லுங்க என்றாள்.முதல்ல அழுகுறத நிறுத்து,நான் என்ன ஏமாத்தப் போறேன்,உங்கிட்ட பண விசியம்மா எதாவது ஏமாத்தினேனா,இல்ல எதாவது ஆசகாட்டி ஏமத்திட்டேனா என்றான்,நீங்க இப்படிலாம் பேசுறத என்னால தாங்க முடியல,உங்க மனசுல நான் இருக்கேனா இல்லயா? பதில் சொல்லுங்க என கண்ணீர் மல்க கேட்டாள்.நீ தப்பான நினைப்போட இருக்கேனு புரியுது ஆர்த்தி,உன்ன விரும்புறேனு உன்கிட்ட எப்பயாவது சொல்லியிருக்கேனா?நீ என்னய நினச்சிட்டுருனு எப்பாவது சொல்லியிருக்கேனா என சந்தோஷ் கேட்டதும் ஆர்த்தி வெடித்து சிதறாததுதான் பாக்கி,அப்படியே மண்ணில் புதைந்து போக முடியாமல் துன்பத்தில் உழன்றாள் ஆர்த்தி.தனது இரு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு குரலையும் வந்த கண்ணீரையும் அடக்கி அழுதாள்.அதற்கு மேல் சந்தோஷிடம் தன் காதலை பேரம் பேச அவளுக்கு மனம் வரவில்லை.

நான் இப்போ சாந்தி அக்கா வீட்ல உன்ன பத்திதான் பேசிட்டு வறேன் என்றான் சந்தோஷ்.விமோட்சம் கிடைத்தது போல கைகளால் மூடிய முகத்தை   விளக்கி சந்தோஷை பார்த்தாள் ஆர்த்தி.இதோ பார் ஆர்த்தி,நீ நினைப்பது போல நான் உன்ன நினைக்கல,உன் படிப்பு வேற, என் படிப்பு வேற.என் படிப்பு சம்மந்தமா படிச்ச பொண்ணுதான் அம்மாவும் தேடிட்டுருக்காங்க.என் அப்பா அம்மாவுக்கு இதுவர எந்த சந்தோசமும் நான் கொடுக்கலனு நினைக்கிறேன்,அவங்க பாத்து ஏற்பாடு செய்ற பொண்ணயே கல்யாணம் செய்தாவது பெத்தவங்கள சந்தோசப்படுத்துறேனே என்று சந்தோஷ் சொன்னதைக் கேட்டு தூக்கி வீசி எறிந்த கண்ணாடியாய் நொறுங்கிப் போனாள்.

நாம சொந்தம்தானே அந்த பொண்ணு நானா இருக்கக் கூடாதா?என கெஞ்சாத குறையாக மன்றாடினாள் ஆர்த்தி.என்ன பெத்தவங்களுக்கோ உன்ன பெத்தவங்களுக்கோ இந்த எண்ணமில்ல என சந்தோஷ் சொன்னதும்,இல்ல எங்க அம்மா என்னப்பத்தி எதோ கண்டுபிடிச்சிடாங்கனு நினைக்கிறேன்,அவங்க முயற்சி இல்லனா,இப்போ நான் இங்க உங்க முன்னாடி நின்னேருந்திருக்க முடியாதுனு வெதும்பினாள்.

நான் போனதட வந்தபோது நீங்க பிகேவ் பன்னது நடிப்பா?இல்ல இப்ப நீங்க பிகேவ் பன்றது நடிப்பா என்றாள் ஆர்த்தி.நான் எப்போதும் ஒரே மாதிரிதானிருக்கேன்,உனக்குதான் புத்தி பேதலிச்சிட்டு,அழுகையை நிறுத்து,போ  முகத்தை கழுவு,நல்லா படி,படிக்கிற வேலய பாரு என்றான் சந்தோஷ்.நான் நம்ப மாட்டேன்.நீங்க ஏமாத்றீங்க.நான் போனதட இங்கு வந்துட்டு ஊருக்கு போனபோது கூட என்னய பாக்கதான பஸ்ஸ்டாண்டுக்கு வந்தீங்க,பஸ் ஏறியபோது ஜன்னல் பக்கமா பாத்தபோது போய்ட்டுவானு  தலையசச்சீங்களே,ஸ்மைல் செய்தீங்களேனு கண்ணீரீல் அடுக்கினாள்      ஆர்த்தி.நினைவுப்படுத்திப் பார்த்தவனாய் ஆமாம் அப்போ என் ஃப்ரண்டும் நானும் பஸ்ஸ்டாண்டில் பேசிட்டுருந்தோம்,அப்ப உங்கள பாத்தேன்,உள்ள போயும் நீ என்ன பாத்ததால் அதற்கு ரஸ்பாண்ட் பன்னேன் அவ்ளவுதான்,அதுக்கு நீ என்ன பேரு வச்சுகிட்டனு சந்தோஷ் கேட்டதும் இத்தனை நாள் தான் சுமந்த காதல் கொச்சைப்படுத்தப்படுவதாக உணர்ந்த ஆர்த்தி பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை.இப்போ உன்னோட பேச்சைப் பாக்கும்போது நீ  என்னய காதலிக்கிறனு சொல்ற,பதிலுக்கு நான் உன்னய காதலிக்கனும்னு எதிர்பாக்குற அப்படிதானே என்றான் சந்தோஷ்.இதே வார்த்தயை காதல் உணர்வுடன் சொல்லியிருந்தால் ஆர்த்தியின் ஆனந்தமே வேறு.ஆனால் அதற்குமேல் காதல் பிச்சை எடுக்க விரும்பாத ஆர்த்தி,ஓடிப்போய் சாமிபடத்துக்கு முன் கவிழ்ந்து அழத் தொடங்கினாள்.பின் வந்த சந்தோஷ்,முகத்தை கழுவு,அப்பா,அம்மா வந்து கேட்டால் என்ன பதில் சொல்றது உன் நினைப்பை மாத்திக்கோ,எனக்காக விதிக்கப்பட்டவள் நீயில்லை.என் வாழ்க்கைத் துணைவியாக  உன்னை நினைத்துப் பார்த்ததில்லை,நீயா எதொ கற்பனை செய்து கொண்டதற்கு
நான் பொறுப்பில்லை என தான் விரும்பியவனே சொன்னதும்  விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்த்தியின் உணர்வு முழுதும் செத்தேபோனது,மரத்துப் போனவளின் கண்ணீரும் நின்று விட்டது. 



Apr 13, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 5

முன் பகுதி

என் சந்தோஷ் மாமாவைப் பார்த்து ஒரு வருடம் ஆகப்போகிறது,அவரும் என்னைப் பார்க்கவோ,என்கிட்ட பேசவோ முயற்சி செய்யல,அவரைப் பாக்க எனக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கல,என்னைப் போலவே அவரும் என்னய விரும்புவார்,விரும்பனும்,நான் அவரப் பாக்கனும்னு அழத் தொடங்கினாள் ஆர்த்தி.

ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து விரும்பினாலே பல பிரச்சனைகள் இருக்கும்,உன் காதல் ஒரு தலைக் காதல்தான் ஆர்த்தி,உன் மாமாவும் விரும்பியிருந்தால்,அதுவும் சொந்தமாக இருக்கும் பட்சத்தில் இந்நேரம் எதாவது ஒரு விதத்திலாவது உன்னை சந்திக்க,பேச  முயற்சி செய்திருக்கலாம்,இன்று வரை எந்த முயற்சியும் இல்லாத பட்சத்தில் நீ மட்டும் உன் காதலில் புழுங்குவது பைத்தியக்காரத்தனம்தான்,சந்தோஷும் உன்னை விரும்புறார்னு எத வச்சு நீ இப்படிலாம் உன்னைய நீயே கஷ்டப்படுத்திட்டுருக்க  ,காதல் ஸ்லோ பாய்சன்னு நீயும் நிருபிச்சிட்ட என்றாள் ஸ்வாதி.  

நெகடிவா சொல்லாத ஸ்வாதி,சந்தோஷ் மாமா நிச்சயாமா என்னை விரும்புவார் என்று தேமி,தேமி மூச்சடைத்து  சொன்னாள்  ஆர்த்தி.
இங்கபார் ஆர்த்தி,உன் சந்தோஷ் மாமாவும் உன்னய விரும்பினால்தான் உன் காதலுக்கு அர்த்தமுண்டு.அவர் மனசுல நீ இருக்கியானு  தெரிஞ்கிறதுக்கான வழியப்பாரு,சரி டைமாயிடுச்சு,வீட்ல தேடுவாங்க,அப்றம் பஸ் கிடைக்காது,வா போகலாம்,உன் மாமாகிட்ட மனம் திறந்து பேசினால் எல்லாம் சரியாகிடும்,இத நினைச்சு படிப்ப விட்டுடாத என்றாள் ஸ்வாதி.பார்க்கிலிருந்து இருவரும் வீடு திரும்பினர்,ஸ்வாதியிடம் பகிர்ந்து கொண்டதில் ஆர்த்தியின் மனபாரம் சற்று குறைந்தது.

வீங்கிய முகம்,சிவந்த கண்கள்,கேட்பதற்கு பொருந்தாத பதில்,தடுமாற்றங்கள் கொண்ட ஆர்த்தியை  பெற்றோரும் கவனித்தும் கவனிக்காதது போலவே இருந்தனர்.இனம் புரியா ஏகத்திலும்,குழப்பத்திலும் செமஸ்டரை முடித்தாள் ஆர்த்தி.படிப்பின் இரண்டாமவது ஆண்டு துவங்கும் முன் சந்தோஷ் மாமாவின் மனதில் நீ இருக்கியானு தெரிந்துகொண்டு வா என விடைபெற்றாள் ஸ்வாதி.ஆர்த்திக்கு சரியான சாப்பாடு,தூக்கம் குறைந்து கொண்டிருக்க,  வீட்டை விட்டு எங்கும் பயணம் போவது பற்றி  பெற்றோரிடத்தில் எந்த பேச்சும் அடிபாடாதது கண்டு வெதும்பிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

ஒருநாள் அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு வீட்டுல இருக்க போரடிக்குது,அத்த மாமாவ பாத்தும் ஒரு வருசமாயிட்டு அத்த வீட்டுக்கு போலாமாப்பா என்றாள் ஆர்த்தி.என்னடா ஆர்த்தி நீ இன்னும் குழந்தையில்ல,அத்த வீட்டுக்கு போலாம், ஆட்டுக்குட்டி  வீட்டுக்கு போலான்றதுக்கு,அதோட அத்தயும் முன்ன மாதிரி இல்லடா,சந்தோசுக்கும் படிப்பு முடிஞ்சுட்டு,கல்யாணத்துக்கு பொண்ணு பாத்திட்ருக்காங்கனு வேற கேள்விப்பட்டேன்,இந்த நேரத்ல நாம அங்க போறது சரியில்லடா ஆர்த்தி,வேற எங்காவது கோயில் கொளத்துக்குனா ரெண்டு நாள் ட்ரிப்மாதிரி போவோமானு ஆர்த்தியின் அப்பா சொல்லிக் கொண்டிருக்க ஆர்த்தி உறைந்தே போனாள்,என்னடா ஆர்த்தி மூடவுட் ஆயிட்டியானு அப்பா கேட்க,இப்பவும் குளியல்றைக்குள் சென்று எனக்கு ஏன் இந்த உயிரென உருகிப்போனாள்,உருகியது உடல்தான் உயிரல்ல.   

படாரென்று குளியலறையின் கதவைத் திறந்து விட்டாள் ஆர்த்தியின் அம்மா,சற்றும் எதிர்பார்க்காத ஆர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்று,ஒன்னுல்லம்மா,ஒன்னுல்லமா என அம்மாவை நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லாமல் சமாளித்தாள் ஆர்த்தி.ஆர்த்தியின் கையைப் பிடித்து    இழுத்து குளியலறையிலிருந்து வெளியில் நிறுத்திய ஆர்த்தியின் அம்மா,    ,  ஆர்த்தி நீ நாங்க பெத்த பொண்ணுதானா,நாம் ஃபிரண்டு மாதிரிதான பழகினோம்,உனக்கு எந்த விதத்ல என்ன குறை வச்சோம்,எங்க உயிரே  நீதான் ஆர்த்தி,எங்க சக்திக்கு மீறி உன்னய படிக்க வச்சிட்டுருக்கோம்,இப்போ நீ படிச்சிட்டுருக்க,உன்கிட்டேருந்து எதுவும் எதிர்பாத்து உன்னய படிக்க வைக்கல,நீ நல்ல படியா படிச்சு உன் வாழ்க்கை நல்லபடியா  அமையனும்னுதான் நானும் உன் அப்பாவும் எதிர்பார்க்கிறோம்,இப்ப நீ என்ன கஷ்டத்த கண்ட , உலகத்த புரிஞ்சுக்க உனக்கு அனுபவம் பத்தாது,நீ தெரிஞ்சுக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு, போய் முகத்த அலம்பிட்டு விநாயகர் கோவிலுக்கு போ,முடிஞ்சா அங்கயும் உக்காந்து அழு,தெளிந்த மனசக் கொடுனு  விநாயகர்ட்ட வேண்டிக்க என்று ஆவேசமாய் வீட்டிற்குள் போனாள் ஆர்த்தியின் அம்மா.

தன் நிலைக்கு என்ன காரணம்னு கேள்வி கேக்காமலே அம்மா பேசிய உண்மை  ஈட்டிகள் ஆர்த்தியை துளைத்து எடுத்ததில் சந்தோஷ் மாமாவின் நினைவு பின் தள்ளப்பட்டுள்ளதையும் உணர்ந்தால் ஆர்த்தி.அம்மாவின் முகத்தை ஆர்த்தியால் நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லை.அன்று இரவு சாப்பிட பெற்றோருடன் அமர்ந்தாள் ஆர்த்தி.உணவு பரிமாறி சாப்பிட ஆரம்பிக்கும்போது, ஆர்த்திக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைக்கனும்,கிடச்சுட்டுனா சகல அபிஷேகமும் செய்து ஆராதிக்கிறேனு அண்ண வீட்டுக்கு போயிருந்த போது பக்கத்துல  உள்ள மாரியம்மன் கோவிலில் பிராத்தனை செஞ்சிருந்தேன்,ஆர்த்தி ரெண்டாவது வருஷமும் போகப்போறா, ,நாளைக்கு காலையில அண்ணன் வீட்டுக்கு போனா நாளான்னைக்கு வெள்ளிக்  கிழமை நேத்திக்கடன நிறவேத்திட்டு வந்துடலாம்னு இனிய குண்டைப் போட்டாள் ஆர்த்தியின் அம்மா.

பழைய ஆர்த்தியாக இருந்திருந்தாள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பாள் ,ஆனால்  தனக்கு வேப்பிலை அடித்த அம்மா இப்போ மயிலிறகாய் தொடர்வது எதற்கு என்று புரியாமல் தன்னையும் கூட்டிட்டு போவாங்களா என்ற கேள்வியில் நீர்க்குமிழியானாள் ஆர்த்தி. என்ன திடீர்னு சொல்ற,இத்தன நாளா இத பத்தி எதுவுமே பேசல,எனக்கு  கொஞ்சம் வேலயிருக்கு,அடுத்த வாரம் பாக்கலாமா,ஆர்த்தி கூட அத்த வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டுருந்தா,நாந்தான் அங்கலாம் இப்ப போனால் சரியிருக்காதுனு சொல்லிட்ட்ருந்தேன்  என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க சாமி நேத்திக்கடன்,நாளாயிட்டு வேற,உங்களுக்கு வேல இரு்க்குன்னா, நானும் ஆர்த்தியும் நாளைக்கு   காலையில போய்ட்டு வெள்ளிக்கிழமை இரவுக்குள் வீட்டுக்கு வந்துடுறோமே என்றாள் ஆர்த்தியின் அம்மா.

ஆர்த்தி எதுக்கு,நீ மட்டும் போய்ட்டு வாயேன் என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க ஆர்த்திக்காகத்தான் அந்த வேண்டுதலே,அவதான் முக்கியாமா வரனுங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.சரி,நாளைக்கு புறப்பிடுங்க,பத்திரமா போய்ட்டு பத்திராமா வாங்க  என்று அனுமதி தந்தார் ஆர்த்தியின் அப்பா.

உள்குத்தாக தர்மடி வாங்கி பல நாள் பட்னி கிடந்தவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தது போலிருந்தது ஆர்த்தியின் நிலை.

                                                                                                 
                                                                                                     தொடரும்.........

Apr 12, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 4

அண்ணன் ஏன் தபால் கூட போடல,ஒரு நாளைக்கு நாம அண்ண வீட்டுக்கு போய் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு வந்திடுவோங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.அடுத்த மாசம் உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் வருதுல,அப்ப மச்சான கலந்துபேசிக்குவோம் என்றார் ஆர்த்தியின் அப்பா.மாமா வீட்டுக்கு நானுந்தானே என்று நூல் விட்டுப் பார்த்தாள் ஆர்த்தி. நீ இப்பொ பெரிய படிப்பு படிக்கிற,அங்க போறது,இங்க போறதுனு இன்னும் சின்னப் பிள்ளையாவே யோசிச்சிட்ருக்காத,இனி  உன் கவனமெல்லாம் படிப்பிலதான் இருக்கனும்,என்றவுடன் அமைதியாக நகர்ந்தாள் ஆர்த்தி.இனி சந்தோஷ் மாமாவ எப்படி,எப்போ பார்ப்பேன்,எப்படி பேசுவேன் மாமா வீட்டுக்கு லெட்டர் போடலாமா,சந்தோஷ் மாமாவத் தவிர வேற யாராவது படிச்சிட்டால் பிரச்சனையாகிடுமே என்ன செய்வதுனு   மனமும்,கண்களும் கலங்கி புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.அர்த்தியின் நடவடிக்கையில்  சின்ன சின்ன தடுமாற்றங்களை கவனித்த   ஆர்த்தியின் அம்மா மகள் மீது அதிக கவனம் செலுத்தினாள்.


 முன்னலாம் பாடங்களை  ஆர்வமாக கவனிப்ப,என்னுடனும் நிறைய டிஸ்கஸ் செய்வ,இப்போ க்ளாஸ் டெஸ்ட்ல கூட  மார்க் கம்மியா  வாங்கிட்டுருக்கியே , என்னாச்சுனு ஸ்வாதி கேக்கத் தொடங்கினாள்.தன் மனக் குழப்பத்திற்கும்,தடு மாற்றத்திற்கும் காரணம் என்னவென்று ஆர்த்திக்கு நன்றாகத் தெரியுமென்றாலும் ஸ்வாதியிடம் சொல்லத் தயங்கினாள்.படிப்பிலும் முடிந்தவரை கவனம் செலுத்தி வந்தாள்.


.திருமணாத்திற்கு சென்றுவந்த பெற்றோர் சந்தோஷ் மாமா குடும்பத்தைப் பற்றி எதாவது பேசிக்கொள்வார்கள் விபரம் தெரிந்து கொள்ளலாமென ஆர்த்தி ஆவலாக இருந்தாள்.வந்த பெற்றோர் தான் எதிர்பார்த்தபடி எதுவும் பேசிக்கொள்ளாததைக் கண்டு சில நாள் கழித்து ,அம்மா.... அத்த,மாமாலாம் எப்படயிருக்காங்க,என்ன சொன்னாங்க,வேற யாரார கல்யாணத்ல பார்த்தீங்கனு  ஆரம்பித்தால் ஆர்த்தி.ஏன் இத்தனை நாள் கழித்து இப்படி விசாரிக்கிறாளென்ற கேள்வியுடன்,எந்த அத்த மாமாவ கேக்ற என்றாள் ஆர்த்தியின் அம்மா.தைரியமில்லா குரலில் சந்தோஷ் மாமா ,.........என்று ஆரம்பித்து முடிக்கும் முன் ஏம்மா அவங்க பேச்ச எடுக்கிற,நாம ஒன்னு நினைத்தால் கடவுள் ஒன்னு நினைப்பான்,சரி எல்லாம் நல்லதுக்குதான் என்றதில் குழம்பிய ஆர்த்தி, என்னாச்சும்மா என்று மேலும் வினவினாள் .


நீ நல்லா படிக்கனும் ஆர்த்தி,உங்கிட்ட இந்த விசயத்த சொல்லலாமா என்னனு தெரியல,உன் படிப்பு முடிந்த பின்,அண்ணங்கிட்ட பேசி சந்தோசையே நம்ம வீட்டு மருமகப்பிள்ளையா ஆக்கிடலமானு நானும் உன் அப்பாவும் நினைச்சிட்டுருந்தோம். வேல எப்ப கிடைக்குதோ கிடைக்கட்டும்,இந்த வருசம் சந்தோசுக்கு படிப்பு முடிந்த கையோடு எதாவது பொண்ண பாத்து கல்யாணத்த முடிச்சிட்டால் மருமக வந்தால் தனக்கு உதவியா இருக்கும் எதாவது பொண்ணு இருந்தா சொல்லுனு எங்கிட்டயே அண்ணி(சந்தோஷின் அம்மா)சொல்றாங்க,இதுக்கு என்ன அர்த்தம்  நம்மளுடன் சம்பந்தகார சம்பந்தம் வச்சுக்க அண்ணிக்கு விருப்பமில்லனுதான அர்த்தம்,உன்ன மருமகாளாக்கனும்னு நினச்சிருந்தா அவங்க விசாரிச்ச விதமே வேற மாதிரி இருந்திருக்குமே,ஆர்த்திய நம்ம மருமகாளாக்காம போயிட்டோமேனு அண்ணி நினைகிறளவுக்கு நீ படிச்சு முன்னேறனும்.வாழ்க்கையில் பக்குவப்படனும்.என்று போட்டு உடைத்தாள் ஆர்த்தியின் அம்மா.


இதைக் கேட்ட ஆர்த்தி  தலை மேல் பல நூறு இடி விழுந்து,பூமியே தலைகீழ் கவிழ்ந்துவிட்ட உணர்வில் மூச்சு அடங்கிய சடலாமாய் நின்றவளை, ஆர்த்தி...ஆர்த்தி...அங்க புத்தகத்தெல்லாம்  அப்படியே கிடக்கு பாரு,எல்லாத்தையும் எடுத்து வை.தோச சாப்பிடுறியா இல்ல உப்மா செய்யவா என ஆர்த்தியின்    அம்மா,   கேட்டபடி     சென்றதில் மின்னலாய் சுயநினைவிற்கு    வந்தவள்       முட்டிக்         கொண்டு       வந்த          கண்ணீரை
கட்டுப்படுத்த       முடியாமல்,வாய் விட்டு அழ இடம் தெரியாமல் ஓடோடிப் போய் குளியலறையில் நின்று வாயார ,மனமார அழுது தீர்த்தாள்.டைம் ஆகுது இன்னும் என்ன பன்ற என அம்மா கேட்டவுடன்,சிவந்த கண்களுடன் வெளியில் வந்தவளைப் பார்த்து,மனது பொறுக்கவில்லை ஆர்த்தியின் அம்மாவிற்கு.என்னாச்சு ஆர்த்தி என்றதும் ஒன்னுமில்லமா சோப்பு கண்ணுல பட்டுட்டு என்றாள் ஆர்த்தி.நேரம் ஆயிட்டு இனி நீ எப்ப காலேஜ்க்கு கிளம்புவ,வேணும்னா இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டுடேன்னு சொன்ன மாத்திரத்தில்,சரிம்மா நாளைக்கு காலேஜுக்கு போய்க்கிறேன் என்றாள் ஆர்த்தி.படிப்பிலும்,கல்லூரிக்கு செல்வதிலும் மிகவும் ஆர்வம் கொண்ட மகளின்  இன்றைய முடிவு ஆர்த்தியின் அம்மாவிற்கு வேதனயை அதிகப்படுத்தியது.

இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் வரப்போகிறது,சொல்லாம கொள்ளாம ஏன் நேத்தி லீவு போட்டுட்ட ஆர்த்தி என்ற ஸ்வாதியிடம்,இன்று மாலை நம்ம பஸ்டாண்டு பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு போகலாமா என்று ஆர்த்தி கேட்டவுடன்,வாவ் ..ஒரு நாள் லீவுல உன்கிட்ட இப்படியொரு மாற்றமா?எனக்கு ஓகே,ஆமாம் படிப்பு,வீடுனு இருப்ப இப்ப என்ன திடீர் ஞானோதயம்னு ஸ்வாதி கேட்டவுடன்,ஆர்த்தியின் கண்கள் கசிந்ததைக் கண்டு பதறிப்போனாள் ஸ்வாதி.ஆர்த்தியின் கைகளைப் பிடித்து,சரி,சரி நான் எதுவும் கேக்கல கல்லூரி முடிந்ததும் நாம பார்க்கிற்கு போகலாம் என்ற ஸ்வாதி, ஆர்த்தி தன் கைகளை இருக்கமாகப் பிடித்திருந்ததின் வலிமையில் ஆர்த்தியின் எதோ ஒரு பிரச்சனையும் அத்தகைய  வலிமையுடைது என்று உணர்ந்தாள்.


மாலை இருவரும் பார்க்கிற்கு சென்றனர்,என் மனசில இத்தனை நாள் புதைத்து வைத்திருந்ததை உன்கிட்ட சொல்லனும்னு நேத்துதான் முடிவு செய்தேன், என்ற அர்த்தியை இங்கபாரு ஆர்த்தி என்கிட்ட உனக்கு  எந்த தயக்கமும் வேணாம்,நேரா மேட்டருக்கு வா,என்னால் சஸ்பன்ஸ்  தாங்க முடியல என்றாள் ஸ்வாதி.சரி என்று ஆரம்பித்த ஆர்த்தி

காதலை பத்தி என்ன நினைக்கிற, ஸ்வாதி ?என்றாள்  ஆர்த்தி.ஓ காட்!! என்ன கேக்ற ஆர்த்தி?அப்டின்னா நீ காதலில் விழுந்துவிட்டாயா?அல்லது எவனாவது உன்னைய காதலிக்கிறேன்ற பேரில் தொல்லை கொடுக்கிறானா?என்றாள் ஸ்வாதி.இப்ப நீ கேட்ட ரெண்டு கேள்வியும் எனக்கு பொருத்தம்தான்,ஆனா நீ என்ன நினைக்கிறேனு சொல்லு என்றாள் ஆர்த்தி.

காதல் சுகமானதுதான்,என்ன பொறுத்த வரை காதல் ஒரு சைலண்ட் கில்லர்,ஸ்லோ  பாய்சன்,உண்மையா காதலிச்சு கல்யாணம் வரை போய் திருமண வாழ்விலும் வெற்றி பெறுபவங்க மிகக் கம்மி ஆர்த்தி,இன்பமோ துன்பமோ நம்மள பெத்தவங்க பாத்து தேர்வு செய்றவங்களையே காதலிச்சுக்குவோமே, ஏன் முன்னடியே ரிஸ்க் எடுக்கனும்னு  சொன்னபடி தோழியின் மனப்புதையலை  அள்ள ஆர்த்தியை நோக்கினாள் ஸ்வாதி.இந்தளவுக்கெல்லாம் நான் யோசிக்கல ஸ்வாதி என்று ஆரம்பித்த ஆர்த்தி தன் காதல் பற்றியும்,தன் சந்தோஷ் மாமா பற்றியும்,தற்போது சந்தோஷ் மாமாவிற்கு பெண் தேடும் விசியம் கேள்விப்பட்டது வரை  A to Z  சொல்லி முடித்து இதெல்லாம் ஏன், எதற்கு,எப்படினு கேட்டால் ’தெரியல’ என்பதுதான் என் பதில்.

 கல்லூரியின் முதல் தினத்தன்று பஸ்ஸில் கோபுர வாசலிலே பாடலைக் கேட்டுதும் என்னவோ தெரியல, அந்த பாடலின் வரிகளும்,பயணத்தின்  சுகமும் சந்தோஷ் மாமாவை நினைத்து வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அதற்கு பின் எத்தனையோ சூழல்கள் என்னை இதே நிலையில்,எதோ ஏக்கத்தில் ஆட்டிப்படைத்துள்ளது்.அன்று ஜன்னலோரத்தில் சந்தோஷ் மாமாவைப் பார்த்ததிலிருந்து பஸ்ஸில் ஜன்னலோரம் உக்கார மாட்டேன்,அப்படி ஜன்னலோரத்தில் உக்கார இடம் கிடைத்துவிட்டால் கூட வெளிப்பகுதியில் யாரையும் பாக்கமாட்டேன், நீ கவனிச்சிருக்கியா நம்ம கல்லூரி வளாகத்தின் வெளியே ஸ்டேஸ்னரி திங்ஸ் கிடைத்தாலும்,நான் பஸ்ஸ்டாண்டில் உள்ள ஸ்டேஸ்னரி கடைக்குதான் போவேன்.ஏன்னா பஸ்ஸ்டாண்டு கடை பேரு சந்தோஷ் ஸ்டேஸ்னரி ஸ்டோர்.ஸ்ரீராம ஜெயம் போல  சந்தோஷ் மாமா ,   சந்தோஷ் மாமா னு தான் எழுதுவேன்.எத்தன நோட்ல எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?அழகா இல்லாதவங்களெல்லாம் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளும்போது,நீ ஏன் இப்படி வரனு நீ கூட கேட்டிருக்க,என் சந்தோஷ் மாமாவிற்கு மட்டும்தான் நான் அழகாத் தெரியனும்னுதான் எந்த அலங்காரமும் செஞ்சுக்கமாட்டேன்,நான் என்ன செய்தாலும்,பார்த்தாலும் என்றாவது சந்தோஷ் மாமாவிடம் பேச நேரம் கிடைக்கும் போது மறக்காம சொல்லனும்னு ஞாபகம் வச்சுக்குவேன் , என முகம் தேய்ந்து போகுமளவிற்கு வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

அடப் பைத்தியக்காரி இதெல்லாம் உன் சந்தோஷ் மாமாவிற்குத் தெரியுமா?உன் காதலைப் பாக்கும்போது எனக்கு காதல் மீது காதல் வருகிறது ஆர்த்தி என்றாள் ஸ்வாதி. 
                    
                          
                                                                                                             தொடரும்..........

Apr 10, 2011

வாக்குப் பதிவு - இப்படியிருந்தால் எப்படி இருக்கும்

வாக்குப் பதிவுக்கு இப்ப என்னவாம்னு என் பதிவிற்குள் வந்தவர்களிடம் சின்ன ஆலோசனை

எதிராளியை எப்படி வேணும்னாலும் பேசி வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்றாங்களே

பிடிச்சவங்களுக்கு ஓட்டு போட்டுத்தானே அரியனையில அமர வைக்க முடியும்.

சற்று மாற்று சிந்தனையாக

அதிக வாக்கு எண்ணிக்கை பெற்றவன் தான் தோல்வியாளன்,குறைவான வாக்கு எண்ணிக்கை பெற்றவன் வெற்றியாளன் என்று ஒரு சட்டம் வந்து விட்டால் என்ன நடக்கும்?


கட்சியாளர்களும்,பிரச்சார வாதிகளும் தங்களுக்குத் தாமே எங்களுக்கு ஓட்டுப் போடாதிங்க,எங்கள ஆதரிச்சு ஓட்டுப் போட்டுடாதீங்க.எதிரணிக்கே உங்கள் பொன்னான ஓட்டைப் போடுங்க,ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கெல்லாம்   எங்க சொத்தில   கால் பங்கு இலவசம்னு வாக்குறுதி தருவாங்கல்ல..........

தேர்தல் கலத்தில நிக்கிறவங்களெல்லாம் எங்களுக்கு வாக்களிங்கோ கழுத குதிரலாம் செஞ்சோம்,செய்திட்ருகோம்,எங்களை ஆதரிச்சு,நாங்க ஆட்சிக்கு வர ஓட்டு போட்டீங்கனா சிங்கம்,புலிலாம் செய்வோம், ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கலாம் டையனசர இலவசமா  தருவோம்னு சொல்றது போல கனவு வந்துச்சுங்க.  அனிமல் ப்ளனட் பார்த்ததின் விளைவாக வந்த  கனவோ?

Apr 9, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 3

ஆர்த்தி பொதுத்தேர்வில் மதிப்பெண் பெற்ற விபரத்தையும்,கல்லூரியில் சேர்ந்துள்ள விபரத்தையும் அண்ணனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்குமாறு கணவனிடம் நச்சரிக்கத் துவங்கினாள் ஆர்த்தியின் அம்மா.ஆர்த்தி மொத மார்க் வாங்கி,கல்லூரியில் சேக்கும் படலத்தில், உடனே கடுதாசி  எழுத மறந்துடேன்,ஆனால் ஆறுமுக அண்ண,ரெங்கா சித்தப்பா எல்லோரும் ஆர்த்திக்கு வாழ்த்து சொல்லியும்,விசாரிச்சும் கடுதாசி போட்டாங்க,நான் இன்னும் பதில் கடுதாசி எழுதவேயில்ல,உங்க அண்ண மட்டும் ஏன் இதுவர ஒன்னும் விசரிக்கவேயில்ல,அவர் காதுக்கு சேதி போகலையா?சரி இன்னைக்கே வந்த கடுதாசிங்களுக்கு பதிலும்,மச்சானுக்கும் விபரம் தெரிவித்து எழுதிடுறேனு  ஆர்த்தியின் அப்பா தன் அம்மாவிடம் கலந்து உரையாடிதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.ஆர்த்திக்கு இத்தனை பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் கிடைத்தாலும் சந்தோஷ் மாமாவை பாக்க முடியாத ஏக்கத்திலும்,அவனிடமிருந்து எந்த தகவலும் பெறாத பட்சத்தில் மதிப்பெண்கள் வாங்கிய சந்தோஷம் முழுமை பெறாமலே இருந்தது.


மனதில் எதோ பயம்,படபடப்புடன் பத்து நிமிட பேருந்து பயணத்தில் முதல் நாள் கல்லூரி சென்ற ஆர்த்திக்கு அனைவருமே புது முகங்கள்,முதல் ஒரு மணி நேரம் அறிமுக வகுப்பு நடைபெற்றது,ஆர்த்திக்கு மாணவிகள் சிலர் தன்னை விட அழகாகவும்,மாடனாகவும் தெரிந்தனர்.மாணவர்களை இவள் பொருட்படுத்தவே இல்லை.வகுப்பிலும்,கல்லூரி வளாகத்திலும் மாணவர்கள் பலருக்கு வசீகரமாகவே தெரிந்தாள் ஆர்த்தி.


தனது இன்ஜினயரிங் படிப்பை நல்லபடியாக படிக்கனும்,கல்லூரியிலும் நல்ல பெயர் எடுக்கனும்,தன் எதிர்காலம் பிராகசிக்கனும்னு உறுதி கொண்ட ஆர்த்தி இரண்டாவது மணி நேரத்தில்  ஹெலன் மேடம் வகுப்பு எடுக்க குறிப்பு     எழுதிக் கொண்டிருந்த   ஆர்த்தி வகுப்பு வாசலிளிருந்து எஸ்க்யூஸ் மீ மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.என்னவோ தெரியவில்லை ஆர்த்திக்கு வந்து நிற்கும் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் பிடித்திருந்தது.பர்மிசன் கொடுத்த ஹெலன் மேம் வந்தவளை விசாரித்துவிட்டு முதல் நாளே லேட்டா என்று சொல்லி வகுப்பில் அவளை அறிமுகப் படுத்திக்க சொன்னார்.


எந்த தயக்கமும் இல்லாமல் ஃப்ரண்ட்ஸ் அயம்  ஸ்வாதி,ஊர்,முன் படித்த பள்ளி,மதிப்பெண் விபரம்  என்று தன்னை அறிமுகப்படுத்தி்  கடைசி இருக்கையில் அமர்ந்த ஸ்வாதியை தன்னை விட சகஜமாகப் பழகுவாள் போலிருக்கேனு மன கணக்கிட்டு மீண்டும் வகுப்பை கவனிக்கத் தொடங்கினாள் ஆர்த்தி.அன்று மாலை கல்லூரி முடிந்து,பேருந்து நிருத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த ஆர்த்தியின் அருகே ஸ்வாதியும் நிற்க இருவரும் சின்ன ஸ்மைல் செய்துவிட்டு வரும் பேருந்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.எத்தனை அழகான ஆண்களை,ஸ்டையிலான மாணவர்களைக் கடந்தாலும் ஆர்த்தியின் மனதில் தன் சந்தோஷ் மாமாவின் அழகுக்கும் ஸ்டையிலுக்கும் நிகராணவன் யாருமில்லை. டி -17   பஸ் வந்தவுடன் ஆர்த்தி,ஸ்வாதி மற்ற மாணவ மாண்வர்களும் உள்நுழைந்ததில் பஸ் கலை கட்டியது.எதோ ஒரு பாடல் டேப்பில் முனுமுனுக்க ஆர்த்தி கிடைத்த சீட்டில் உக்கார ஸ்வாதி தன்னருகே இடம் கிடைக்காமல் நின்றதைப் பார்த்து இங்க உக்காரு அட்ஜஸ்ட் பன்னிக்கலாம்னு ஆர்த்தி சொன்னதும் பரவாயில்ல,மூனாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிடுவேனென்றாள் ஸ்வாதி.




ஜாலியாகப் பேசி,அரட்டை அடித்த மாணவர்கள் என்ன பாடுதுனே கேக்கல வால்யும் வைங்க டிரைவர் அண்ணா என கூச்சலிட வாலயுமை ஒரு ரவுண்ட் அதிகப் படுத்தினார் டிரைவர். இளையராஜா இசையில் பாடல் ஒலிக்க இரண்டாவது ஸ்டாப்பிங்கில் ஆர்த்தியின் அருகில் அமர்ந்திருந்தவர் இறங்க, ஸ்வாதியும்  ஆர்த்தி அருகே அமர்ந்தாள். யெஸ் ஐ லவ்    திஸ் இடியட்,லவ் திஸ் லவெபில் இடியட்.........இது ஒரு காதல் கவிதைகள் படித்திடும் நேரம்,இதழோரம் என்ற பாடல் ஒலித்தவுடன் ஆர்த்தியால் கட்டுக்குள் இருக்கவே முடியவில்லை,வெடித்து அழத்தொடங்கியவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதைப் பார்த்த ஸ்வாதிக்கு ஒன்றும் புரியவில்லை,ஏம்ப்பா என்னாச்சுனு ஸ்வாதி கேட்டவுடன் கீழே குனிந்து குமறி அழுதாள்,அதற்குள் மூன்றாவது ஸ்டாப்பிங் வந்துவிட ஆர்த்தியை மனதில் பதித்தவளாய்,அழாதப்பா ,மத்தவங்க கவனிச்சாங்கன்னா என்ன நினைப்பாங்க,நாளைக்கு பார்ப்போம்னு சொல்லி இறங்கினாள் ஸ்வாதி.வயிற்று வலி எதாவது வந்திருக்குமோ,ஆர்த்தி எங்க இறங்குவானு கூட கேக்காம வந்துட்டோமேனு தெளிவாக இருந்த ஸ்வாதியும் ஆர்த்தியை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றாள்.
கஷ்டப்பட்டு கட்டுக்குள் வந்த ஆர்த்திக்கும் ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறோம்,என்ன செய்யப்போறோம்னு ஒன்றும் புலப்படவில்லை.முதல் நாள் கல்லூரிக்குச் சென்ற மகளை வரவேற்க வாசலில் காத்திருந்த ஆர்த்தியின் அம்மாவிற்கு சிவந்த கண்களுடன் வந்த ஆர்த்தி கல்லூரி பற்றியும் வகுப்பு பற்றியும் சொல்லிக் கொண்டிருந்ததைக் ம்...ம்..னு கேட்டுக் கொண்டிருந்தாலும் எதையோ மறைத்து  எதோ சொல்கிறாள் மகள் என முதல் முறையாக சந்தேகித்தாள் ஆர்த்தியின் அம்மா.

மறுநாள் காலை ஆர்த்தியை பார்க்க ஆவலாக டி-17 பஸ்சில் ஏறி  இதே பஸ்சில் ஆர்த்தி வந்திருப்பாளோ எனத்  தேடியதில்  ஜன்னலோரமாக அம்ர்ந்திருந்த ஆர்த்தியைக் கண்டு வேகமாகப் போய் ஆர்த்தி அருகில் ஹாய் சொல்லி அமர்ந்தாள் ஸ்வாதி,உடம்பு ஏதும் பிரச்சனை இல்லயே,எப்போதும் இந்த பஸ்லதான் வருவியானு பேச்சைத் தொடங்கினாள் ஸ்வாதி,அதெல்லாம் ஒன்னுமில்ல,ஹா.. இந்த பஸ்சிலதான் வருவேன்,காலேஜ் டைமிற்கு இந்த பஸ்தான் சரியாவருமென்றாள் ஆர்த்தி .நேத்தி உனக்கு என்னாச்சுனு கேட்ட ஸ்வாதிக்கு  மெளனம் தான் ஆர்த்தியின் பதில்.கல்லூரியின் உணவு இடைவேளையில் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்த்தியை கவனித்த ஸ்வாதி ஆர்த்தியின் அருகே வந்து கம்பெனி கொடுத்தாள்.பஸ்சில் ஒன்றாக போவது,வருவது,ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது,படிப்பு சம்மந்தமாக கலந்துரையாடுவது, இப்படி இவர்களின் நட்பு வளர்ந்தது .ஆர்த்தியும் ஸ்வாதியும் தங்களுக்குள்  எதோ ஒரு லின்க்  இருப்பதாகவே உணர்ந்தனர், பள்ளி காலங்களில் தான் எதிர்பார்த்த தன்னலமற்ற நட்பு இப்போது  ஸ்வாதியின் மூலம் நிறைவேறுவதாகவே உணர்ந்தாள் ஆர்த்தி.   


                                                                                                               தொடரும்.....

Apr 8, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 2

சந்தோஷ் முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறான்,ஆர்த்தியின் ஊரிலிருந்து பேருந்து நல்ல முறையில் வேகமாகச் சென்றால் ஐந்தரை மணிநேரத்தில் சென்றுவிடலாம்.சந்தோஷ் குடும்பத்திற்கு அன்பான,பொறுப்பான,அழகான,அலட்டல் இல்லாத வாலிபமான  மகன்.படிப்பிலும் சிறந்தவன்,குடும்ப சகிதமாக விடுமுறைக்கு மாமா வீட்டுற்கு போவாள் ஆர்த்தி,சொந்தங்களின் சுப நிகழ்ச்சியிலும் சந்தோஷை சந்திதுள்ளாள்,ஆர்த்தியுடன் சந்தோஷ் சகஜமாக பேசுவது கிடையாது,ஆர்த்தி இதை பொருட்படுத்தியதுமில்லை.மாமா என்று கூப்பிட்டதுமில்லை.சொல்வதாக  இருந்தால் ஆர்த்தி அத்த கூப்பிடுறாங்க பாரு என்பான் சந்தோஷ், ம்...இதோ போறேன் என்பாள்.அவ்வளவுதான் இவர்க்ளுக்கிடையேயான பந்தம் இருந்தது.ஆர்த்தி ஏன் கோவிலுக்கு இந்த வழியில போற,உங்க ஊர்னு நினைச்சுட்டியா,எல்லாம் மோசமானவன்க,நீ மெயின் ரோடு வழியாகவே போ என்பான், ஆர்த்தியிடமிருந்து சரி,சரி என்று மட்டுமே பதில் வந்தது.மனதுக்குள் மட்டும் சந்தோஷ் மாமானு கூப்பிட்டுக்கொள்ளும் ஆர்த்தி,ஏன் சந்தோஷ் மாமாவிற்கு நம்ம மேல இப்படியொரு அக்கறை . எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நான் ஏன் சந்தோஷ் மாமாவிடம் மட்டும் சகஜமாகப் பழக மறுக்கிறேன்.நேருக்கு நேர் மாமானு கூப்பிடக் கூட மனம் வரமாட்டிங்குதேனு தனக்குத் தானே பல கேள்விகளும்,யோசனைகளுமாய் முதல் முறை யோசித்துக் கொண்டே கோவிலுக்கு போனாள்.

 வெட,வெடவென வளர்ந்த்து,கண்ணைக் கவரும் ஓவியம் போன்ற ஆர்த்தி சந்தோஷ் வசிக்கும் தெருவினில் அந்த வீட்ட்ற்கும்,இந்த வீட்டிற்கும் போகும்போதெல்லாம் சந்தோஷ் வீட்டிற்கு அருகிலுள்ள மற்ற சில சொந்தங்களும் அக்கம் பக்கத்திலும்,ஆர்த்தி மாமன பாக்க வந்தியா  என்றும்,சந்தோசு பொண்ண நல்லா பாத்துக்கடா என்று கேலி செய்யும்போது ,  சே இதான் இந்த கிராமத்து பக்கமே வரக்கூடாதுனு கடுப்பில் மனதுக்குள்ளே புலம்பிக்கொள்வாள் ஆர்த்தி.
ஆர்த்தியைவிட 4  வயது பெரியவனான சந்தோஷ் எதிலும் யோசித்து பக்குவமாக செயல்படும் சந்தோஷ் அந்த கேலிகளை மறுத்ததில்லை, முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிடுவான்.இதுதான் ஆர்த்தியை மேலும் யோசிக்க வைத்தது.தன் அத்தை வீட்டில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த ஆர்த்தியிடம் தோட்டத்தின் வழியாக வந்த எதிர் வீட்டு அக்கா என்ன ஆர்த்தி பாத்திரம்லாம் விளக்கிட்டுருக்கியா,அத்த எங்கனு குரல் கொடுத்த சாந்தி அக்காவை,வாங்கக்கா என்று கைகளை கழுவிவிட்டு வரவேர்த்த ஆர்த்தி,அம்மாவும் அத்தயும் கடைக்கு போயிருக்காங்கக்கா,நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம்ல,அதான் கொஞம் சாமான்லாம் வாங்க வேண்டிருக்கு.அப்பாவும் ....ம்னு இலுகையிட்டவள் சந்தோஷ் பெயரை சொல்ல ஏனோ மனம் வரவில்லை இதோ ஹாலில்தான் டீவீ பாத்திட்டுருக்காங்க போல,நாலடி வைத்தவுடன் தென்பட்ட அந்த சின்ன ஹாலில் ஆர்த்தியின் அப்பாவும் சந்தோஷும் கிரிக்கெட் மேச் பார்த்துக்கொண்டிருந்தனர்.


வாசல் பகுதியிலிருந்து  சந்தோஷின் அப்பாவும் உள்நுழைந்தார். எதிர்பட்ட சாந்தியை வாம்மா சாந்தி உக்காரு என்றவரிடம்,பரவாயில்லண்ணே சந்தோசம்மாவ பாத்துட்டு போகலாம்னு வந்தேன்,கடைக்கு போயிருக்காங்க போலயிருக்கு,நான் அப்றமா வறேனென்றவள் மருமக நல்லா வேளையிலாம் பாக்கிறா போலருக்கே,என்ன சந்தோசு இப்பவே ஆர்த்திக்கு ட்ரெய்னிங்கா என்று சாந்தி அக்கா கேட்டதும் சந்தோஷ் சின்ன புன்னகையுடன் ஆர்த்தியை ஒரு வினாடி பார்த்துவிட்டு மீண்டும் கிரிக்கெட்டைப் பார்த்தான்.இத்தனை நாள் சந்தோஷை பார்த்த போது தோணாத எதோ ஒரு உணர்வு சந்தோஷின் அந்த ஒரு வினாடி பார்வையாலும்,புன்னகையாலும் பிறந்தது.பல பேர் பல முறை கேலி செய்த போதெல்லாம் தோண்றாத இந்த உணர்வு இன்று சாந்தி அக்கா மூலம் பிறந்தாகிவிட்டது.
வந்த வழியே திரும்பிச் சென்ற சாந்தி அக்காவுடன் தோட்டம் வரை சென்றவளுக்கு போயிட்டு வறேம்மானு சாந்தி சொல்லிட்டு போவதுகூட காதில் விழவில்லை. 

சந்தோஷின் அந்த புன்னகையும்,பார்வையும் ஸ்லைட் ஷோவாக ஆர்த்தியின் மனதில் போய்க்கொண்டிருந்தது.சந்தோஷ் மாமவின் அந்த புன்னகைக்கு காரண்மென்ன ? சந்தோஷ் மாமா தன்னை விரும்புகிறாரோ,இவர்களெல்லாம் சொல்வது போல மாமா என்னை கட்டிக்க விரும்புகிறாரோ என்று யூகித்தவளுக்கு இனம் புரியாத உணர்வு பிறந்தது.புதிதாக இந்த உலகத்தில்
பிறந்துள்ளது போல நினைக்க ஆரம்பித்தாள்.
இதுவரை சாதரணமாக தன் மாமனை பார்த்தவள்,புதிதாய் பிறந்த நிமிடத்திற்கு பிறகு சந்தோஷைப் பார்த்தாலே பரவசம் ஆகத்தொடங்கினாள்,தான் ஏன் இப்படி உணருகிறோம்னு தனக்குத் தானே கேட்டாலும் அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வராத வெக்கமெல்லாம் வருவதாக உணர்ந்தாள்.சந்தோஷ் என்ற பெயரை  சொல்லி,சந்தோஷ் மாமா என்று மனதிற்குள் கூப்பிட்டும் பூரித்துக்கொண்டாள்.எப்படா ஊருக்கு போவோம்னு நினைத்தவளுக்கு இப்போது சந்தோஷ் வீட்டிலிருந்து புறப்பட  மனம் வரவில்லை.தான் என்ன உணருகிறாள்,இதை யாரிடம் எப்படி சொல்வது,சரிதானா?இப்படி பல குழப்பங்களுடன் சற்று பித்துப் பிடித்தவள் போலாகிவிட்டாள்.


இரவு உணவு முடிந்தது. மறுநாள் காலை ஊருக்கு போவதற்கு ஆர்த்தியின் அம்மா பேகிங் செய்துகொண்டிருந்தாள்.ஆர்த்தி....  தோட்டத்தில் கொடியில் எதாவது துணிகள் விட்டுடோமானு பாத்திட்டு வாமா என்றாள் ஆர்த்தியின் அம்மா.போங்கம்மா நீங்களே போய் பாருங்க என்ற ஆர்த்தி சந்தோஷ் தோட்டத்தை நோக்கிப் போவதைப் பார்த்தவுடன்,சரிம்மா இதோ போய் பார்த்திட்டு வறேனு கிளம்பினாள்.தோட்டத்திற்கு போனவள்  கொடியில் எந்த துணிகளும் இல்லை,வந்த சந்தோஷ் மாமாவையும் காணுமே என்று கண்களை சுழல விட்டவள் யாரோ இடதுபுற சுவற்றில் சாய்ந்து நிற்பதைக் கண்டு பக்கென பயந்த மாத்திரத்தில் அது சந்தோஷ் மாமாதான் என்பதை உணர்ந்தவுடன் இனம் புரியாத சந்தோஷத்தில் அவள் இதயம் துடிப்பது அவள் காதுக்கே கேட்டது.அசால்ட்டாக சுவற்றில் சாய்ந்து கொண்டு இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறார் என்று ஆர்த்தி யோசித்து முடிப்பதற்குள் என்ன ஆர்த்தி ஊருக்கு கிளம்பிட்டியா என்று தொய்வான குரலில் கேட்டான் சந்தோஷ்,இதைக் கேட்ட ஆர்த்திக்கு தான் நிற்கும் பூமி சுழல்கிறதா,தான் சுற்றுகிறோமா என்று தெரியாதளவுக்கு சின்ன மயக்கமே வந்தது போல இருந்தது.பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை,தனது மிரட்சியான கண்களை இமைத்து அடைத்துவிட்ட தொண்டைக்குழியிலிருந்து ம்....என்று பதில் சொன்னாள்.தன்னைப் போலவே சந்தோஷ் மாமாவும் உணர்ந்ததால்தான் இப்படியொரு கேள்வி கேக்கிறார் என்று மனதில் அசைபோட்டு முடிப்பதற்குள்,சரி பன்னிரெண்டாவது படிப்பு ரொம்ப முக்கியம்,நல்லபடியா படி என்றான்.

அதற்கும் ம்..என்றாள் ஆர்த்தி.தனது பட்டாசு பேச்சு,மத்தாப்பு சிரிப்பெல்லாம் ஓடி ஒளிந்துகொண்டதையும்,தினமும் பார்த்த சந்தோஷ் மாமா இப்போ ஏன் புது ரூபமாகத் தெரிகிறார் என்பதற்கும் ஆர்த்திக்கு விடை தெரியவில்லை.அதற்குள் இன்னும் அங்க என்ன பன்ற...என  அம்மா குரல் கேட்டவுடன் மிக வேகமாக அம்மாவிடம் போனவள் எந்த பதிலும் சொல்லாமல் எதோ சிந்தித்துக் கொண்டிருந்தவளை என்னம்மா அங்க எதும் துணிங்ல்லாம் இல்லேல என்ற அம்மாவிற்கும் பதில் சொல்லாமல் நின்றவளை ஆர்த்தி,ஆர்த்தி என்னாச்சு உனக்கு என்று அம்மா குரல் கொடுத்தவுடன்தான் இல்லம்மா.அங்கெல்லாம் ஒன்னுமில்ல என்றாள் ஆர்த்தி.


சரி நான் எல்லாம் எடுத்து வச்சுடேன் நீ படுத்து தூங்கு,நான் சித்த நேரம் அத்த மாமாட்ட பேசிட்டு வறேன்,காலையில ஆறு மணி பஸ்சுக்கு போனாதான் சாய்ங்காலத்திற்குள் வீட்டுக்கு போய் சேரலாம்னு சொல்லிட்டு நகர்ந்தாள் ஆர்த்தியின் அம்மா.ஆர்த்திக்கோ தலை வெடிக்காத குறைதான்,நாம ஏன் இப்படி ஃபீல் பன்றோம்,சந்தோஷ் மாமா ஏன் அங்க போய் நின்னுட்டுருந்தாரு,அவர் கேட்ட கேள்விகளை வீட்டிலே கேட்டிருக்க வேண்டியதுதான,நம்மள தனியா பாத்து பேசதான் அங்க போய் நின்னுட்டுருந்தாரோ,இன்னும் சித்த நேரம் நின்னுருந்தால் வேறன்ன கேள்வி கேட்டிருப்பார்,வேறென்ன பேசிருப்பார்னு பல கேள்விகள்,இதே மன ஓட்டத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை,படுப்பதும்,எந்திரிப்பதுமாக இருந்தாள்.

சில நிமிடங்களில் நான் சந்தோஷ் மாமாவை விரும்புகிறேன்,சந்தோஷ் மாமாவும் தன்னை விரும்புகிறாரா அல்லது எதார்த்தமாகதான் நடந்து கொள்கிறாரா? என்று தன் மனக்கோட்டை கதவை அடைத்து கண்ணசர போகும் நொடியில் “யே சந்தோசு..அங்க என்ன செய்ற, காலையில ஊருக்கு கிளம்புறாங்க,நீ ஏழரை மணிவர தூங்குவ,எழுப்பினா கோபம் வரும்,  இங்க வாப்பா அத்த மாமாட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு போய் படுத்து தூங்குப்பா”என்று சந்தோஷின் அம்மா குரல் கேட்டவுடன் தன்னறியாமல் வந்த தூக்கமும் பரிபோனது,இன்னமும் சந்தோஷ் தோட்டத்தில்தான் இருகிறான் என்றும் புரிந்து கொண்டாள்  ஆர்த்தி.ஆனால் அந்த இடத்தை விட்டு நகரவோ,சந்தோஷ் மாமா எந்த வழியில் போகிறான்,அங்கு யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவோ ஆர்த்திக்கு தைரியமில்லை.சற்று நேரத்தில் என்ன ஆர்த்தி இப்டி செவுத்துல சான்ஜு தூங்கிட்ருக்கனு ஆர்த்தியின் தோல்பட்டையை உலுக்கிய அம்மாவை மிரள,மிரள பாத்து படுத்து தூங்கினாள் ஆர்த்தி.


பொழுது விடிந்தது,பரபரப்பாக புறப்பட்டார்கள்,பதட்டத்துடன் இருந்த ஆர்த்திக்கு சந்தோஷ் மாமா கண்ணில் படவேயில்லை,பன்னண்டாவது போற நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி அப்பா அம்மாவுக்கு பெருமை சேக்கனும்னு அறிவுரையும்,ஆசிர்வாதமும் கொடுத்தார்கள் சந்தோஷின் பெற்றோர்.அதெல்லாம் என் பொண்ணு நல்ல மார்க் வாங்கிடுவா மச்சான் என்றார் ஆர்த்தியின் அப்பா.  வீடு, தோட்டமெல்லாம் போய் பார்த்தாள் ஆர்த்தி,சந்தோஷைக் காணவில்லை,சந்தோஷ் மாமா எங்கனு கேட்டு தெரிந்து கொள்ளவும் தைரியமில்ல.இப்போ ஊருக்கு போனால் இனி அடுத்த விடுமுறைக்குதான் வரமுடியும்.கடைசியாக சந்தோஷ் மாமவை பார்க்காமல் போறோமேனு   மனதை இங்கே விட்டு உடல்கூடாக  படி இறங்கி பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டாள் ஆர்த்தி பெற்றோருடன்.பஸ்சேத்திவிட கூடவே சந்தோஷின் அப்பாவும் வந்தார்.காலங்காத்தால எழுந்திரிக்கவே மாட்டான் இந்த சந்தோஷு இன்னைக்கு என்னமோ ஃபிரண்டு வீட்டுக்குப் போய் எதோ புக்கு தரனும்னு அவசரமா எழுந்து கிளம்பி போய்ட்டான் என்று  பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் சொல்லிக் கொண்டே வந்தார்  சந்தோஷின் அப்பா.


இதைக் கேட்ட ஆர்த்தி மனதளவில் தளர்ந்தே போனாள்,நாம ஊருக்கு போறோம்னு கொஞ்சம் கூட வருத்தமில்லாம,இனி எப்ப பாக்க போறோன்ற நினைப்பில்லாம சந்தோஷ் மாமா இப்படி எங்கயோ போய்விட்டாரே,  ப்ஸ் ..நாந்தான் தவறா மனதில் ஆசைய வளத்துகிட்டேன் போல,இல்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்கு,இல்ல என் மனசுக்குள்ள வந்த சந்தோஷ் மாமா வந்தவர்தான்,அவர் என்னோட சந்தோஷ் மாமா,எனக்கு மட்டும்தான் சொந்தம்னு பெற்றோரின் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள் ஆர்த்தி.பஸ்டாண்டு வந்துட்டு மணி ஐந்து அம்பத்தியைந்து ஆகிட்டு ஐந்து நிமிடத்தில் பஸ் வந்திடும்.ஆர்த்திக்கு மனது மட்டுமல்ல தன் உடலே பாரமாகிப்போனது.பஸ் வந்தால் கூட தன்னை யாராவது தூக்கித்தான் உக்கார வைக்கனும்போல உணர்ந்தாள்.குனிந்த தலை நிமிராமல் நின்ற ஆர்த்தி,  ஆர்த்தி ....என்று யாராவது இணக்கமாக அழைத்தால் ஓ  வென்று அழுதுவிடும் மன நிலையில் நிற்கிறாள்.தன்னுடன் நிற்பவற்கள் தனக்குரிய பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்க,ஆர்த்தியின் அப்பா ,அங்க பாருங்க மச்சான்,சந்தோஷ்  அங்க நின்னு யார்கிட்ட பேசிட்டுருக்கான் என்றதும்,உயிர் உதித்து எழுந்தவளாய் ஆர்த்தி அங்குமிங்கும் கண்களை சுழற்றி சந்தோஷைத் தேட தனக்கு எதிர் பஸ் நிருத்தத்தில்தான் சக வயதுள்ளவனுடன் பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்,பூரிப்பில் ஆர்த்தி முழுமையாக சந்தோஷத்தை உணர்வதற்குள்,பார்ப்பதற்குள் ஆர்த்தி செல்ல வேண்டிய பஸ் வந்தாகிவிட்டது,ஆர்த்தியை முன் தள்ளி பேகெல்லாம் எடுத்துகிட்டியா ஏறு,ஏறுனு பார்வையை திசை திருப்பி ஏறவைத்தாள் அம்மா. பஸ்சுக்குள் நுழைந்த ஆர்த்தி அவசரமாக எதிர் பக்க ஜன்னல் பகுதிக்கு போய் சந்தோஷைத் தேடி உற்றுப் பார்த்தவளை நின்ற இடத்திலேயே சந்தோஷ் சரியாகக் கண்டுபிடித்து நேசமுடன் போய்ட்டுவா ஆர்த்தி என்று சொல்லும் வண்ணம் புன்னகையுடன் தலை அசைத்து,பாத்துக்கலாம் போய்ட்டுவா என்றவண்ணம் கண்ஜாடை காட்ட பஸ்சும் நகர்ந்தது.


வரிசையான ஆயிரம் மலர்கள் ஒரே நொடியில்  மலருவதைக் காணும் பாக்கியம் கிடைத்தால் நம் முகத்தில் எத்தனை மலர்ச்சி ஏற்படுமோ அத்தனை மலர்ச்சி ஆர்த்தியின் முகத்தில்.நான் உன்னை விரும்புகிறேன்னு  சந்தோஷ் மாமா ஆயிரம் முறை  சொல்லிவிட்டதாக பூரிப்படைந்தாள் ஆர்த்தி.ஆனந்தத்தில் வரும் கண்ணீரை பெற்றோருக்குத் தெரியாமல் துடைக்கும் முற்சியில் இருந்தவளை,ஆர்த்தி அங்கையே எவ்ளோ நேரம் நிப்ப,இங்க வா,அப்பா பக்கத்தில வந்து உக்காருன்னு ஆர்த்தியின் அம்மா கூப்பிடதும்தான் சுயநினைவுக்கு வந்தவளாய்,வறேம்மானு பெற்றோர் பகத்தில் அமர்ந்தாள்.இப்போதும் அவளின் குழப்பம் அதிகமானது,சந்தோஷ் மாமா நம்மள வழியனுப்பதான் ஃபிரண்டுகிட்ட புக்குத்தரனும்னு பொய் சொல்லிட்டு பஸ்டாண்டுக்கு வந்தாரோ,ஏன் வீட்லையே நம்மளை வழியனுப்பியிருக்கலாமே,ஒருவேள ஊரைவிட்டு போற கடைசி நிமிடத்துலேயும் நம்ள பாக்கனும்னு நினைச்சாரோ,போய்ட்டு வா,பாத்துக்கலாம் போனு புன்னகைத்து,தலையாட்டி,கண்ஜாடை காட்டினாரே அதெல்லாம் எதார்த்தமானதா,அல்லது நிஜமாகவே நம்மை விரும்புவதனாலா?சந்தோஷ் மாமா நின்ற தோரணையை பார்த்தால்,நமக்கு முன்னே வந்து காத்துக் கொண்டிருந்தது போலவே இருந்ததே ,அப்படியெனில் ஏன் நம் அருகே வராமல் எதிர்பக்கமே நின்று கொண்டிருந்தார்,இப்படி பல கேள்விகள் அவளுக்கு  சில நிமிடத்திற்கு முன் பெற்ற மெல்லிய காதல் உணர்வை,பூரிப்பு மிக்க சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் துளைத்தன.அப்படியே தன் அப்பா மடியில் படுத்து வெதும்பினாள்.தன் மகளின் மனம் படும்பாட்டை அறியாத அப்பா ஆர்த்தியின் தலயை வருட ஆர்த்திக்கு கண்ணீர்  அமைதியான நீரோடையாய் வந்து கொண்டிருந்தது.


தனது பதினொராம் வகுப்பு விடுமுறையில் கடைசி ஒரு வாரத்தை தனது அம்மாவின் அண்ணன் (சந்தோஷின் அப்பா)வீட்டில்  கழிக்க பெற்றோருடன்  வந்த ஆர்த்தி சந்தோஷின் மீதான காதலையும் சுமந்து, சந்தோஷ் தன்னை விரும்புகிறானா என்பதை எப்படி,எப்போது உறுதி செய்துகொள்ளப் போகிறேனென்ற கேள்வியுடன் சொந்த ஊருக்கு சென்றாள் .


மறுநாள் பன்னிரெண்டாவது வகுப்பு துவங்க உள்ளது,ஆர்த்தி தன்க்குத் தானே  உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்,என்னவெனில் மென்பொருள் இன்ஜினேயர் ஆவதுதான்,தனது எதிர்கால குறிக்கோள்,மார்கைப் பொறுத்து கிடைக்கும்  எந்தத்  துறையானாலும்  இன்ஜினேயரிங்  படிப்பதுதான் தனது மற்றும் பெற்றோரின் விருப்பமும்.எப்போதும் முதல் மதிப்பெண் பெறும் ஆர்த்தி  சந்தோஷ் மாமா நினைவில் அவ்வப்போது  நிலைகுலைந்தாலும் படிப்பில் கவனத்தை சிதறவிடாமல் முதல் மதிப்பெண்களே பெற்று வந்தாள்.


பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட இந்த தருணத்தில் ஆர்த்தியின் மனதில் பல குழப்பங்கள்.இந்த ஒரு வருட காலத்தில் சந்தோஷும் ஆர்த்தியும் சந்திக்க எந்த சந்தர்ப்பமும் அமையவில்லை,அதற்கான முயற்சிகளும் இருவரும் எடுத்துக் கொள்ளவில்லை.இடையில் தூது செல்லக் கூட ஒன்றும் அம்புடவில்லை.இந்த விடுமுறையில் மேல்படிப்பிற்கான தேடல்,நுழைவுத் தேர்வு என்று ஏகப்பட்டது இருப்பதால் அப்பா நிச்சயம் சந்தோஷ் மாமா வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டு போக மாட்டார்,சந்தோஷ் மாமாதான் தன் வாழ்க்கைத் துணைவன் என்ற ஆசை,நம்பிக்கயைத் தவிர,சந்தோஷ் தன்னை விரும்புகிறான்,காதலிக்கிறான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.ஆனால் சந்தோஷ் மாமா வீட்டில் ஒரு வாரம் கழித்த விடுமுறை நாட்களை,கடைசி அந்த இரண்டு நாளில் நடைபெற்ற  சந்தோஷ்க்கும் தனக்கும் உண்டான புரிதல் நிமிடங்களை இந்த ஒருவருடத்தில் கோடி முறை நினைத்து , நினைத்துப் பார்த்து சந்தோசப்பட்டிருப்பாள்.எதோ ஒரு ஏக்கத்திலும் அவ்வப்போது கண்கலங்குவாள்.


இந்த ஒரு வருடத்தில் எந்த கோவிலுக்கு போனாலும்,இனி எப்ப சந்தோஷ் மாமாவை சந்தித்தாலும் கோவில் பிரசாதம் கொடுக்கனும்னு,அங்கிருந்து தனியாக திருநீரு,குங்குமம் எடுத்து வைத்துக்கொள்வாள்,எதாவது நினைக்கும்போது கோவில் மணி அடித்தால் நல்ல சகுணம்,நினைத்தது நடக்கும்னு கேள்விப்பட்டவள் தன் வீட்டின் அருகேயுள்ள கோவிலில் மணி அடிக்கும்  நேரத்தை தெர்ந்து வைத்துக் கொண்டு கோவில் மணி ஓசை கேக்கும்போது சந்தோஷ் மாமா என்னை விரும்ப வேண்டும்,அவர்தான் என் கணவனாகக் கிடைக்க  வேண்டுமென்று சொல்லிக் கொள்வாள்.
தான் பள்ளி கிளம்பும் போது தனது சந்தோஷ் மாமாவும் இப்போ கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருப்பார்,இப்போது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்,இப்போ டீ,வீ பார்த்திட்டுருப்பார்,இப்ப ஃபிரண்ட்ஸுடன் பேசிக்கொண்டிருப்பார்,இந்நேரம் தூங்கியிருப்பார் என்று சந்தோஷ் மாமாவை கனவில் வாழ வைத்துக்கொண்டிருந்தாள்.தன் பெற்றோர் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களோ சந்தோஷ் மாமா குடும்பம் சம்மந்தமாக எதாவது பேசுகிறார்களா என்று கூர்ந்து கவனிப்பாள்,அப்படி எதாவது அவர்களைப் பற்றி பேச்சு நடந்தாள் குஷியாகிவிடுவாளேத் தவிர யாரிடமும் அத்த, மாமா  எப்படி இருக்காங்க,தன் சந்தோஷ் மாமா எப்படி இருக்கார்னு மறந்து போய் கூட விசாரிக்க மாட்டாள் ஆர்த்தி.தன் பாசமிகு பெற்றோரை,கடவுளை நினைக்கிறாளோ இல்லையோ காலை விழித்ததிலிருந்து,இரவு தூங்கும் வரை சந்தோஷுடன் தனது  மறுபக்க உலகில் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஆர்த்தி.


அப்பாவிடம் வாக்களித்தது போலவே சிரத்தையுடன் பொதுத்தேர்வையும் எழுதி 1175 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும் மாவட்டளவிலும் முதல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும்,பள்ளிக்கும்  பெருமை தேடித் தந்தாள்.பெற்றோரும்,பள்ளி ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகமும் ஆர்த்தியினால் பெருமை கொள்ள, நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று  தனது மாவட்ட இன்ஜினயரிங் கல்லூரியில் கணினித்துறையில்   ஃபிரி சீட்டும் பெற்றுவிட்டாள்.தொலைக்காட்சி,செய்திதாள் முதலியவற்றில் ஆர்த்தியின் படமும்,பேட்டியும் கண்டு ஆசிரியர்கள்,உற்றார்,உறவினர் எல்லோரும் முதல் மதிப்பெண் பெற்ற சந்தோசத்தைக் கேட்டு வாழ்த்தினாலும்,ஆர்த்தியின் மனது சந்தோஷ் மாமாவின் வார்த்தைக்கும்,வழ்த்திற்கும் ஏங்கியது. 
                                                                                                                             
                                                                                                                                தொடரும்......